தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2282


விதி.

(இ-ள்)  நடுவுநிலைத்   திணைக்கு    முற்கூறிய    வேனிலன்றிப்
பின்பனிக்காலமும் உரித்து எ-று.

இது     கூதிரை,     முன்பனியாகிய     மார்கழியுந்    தையுந்
தொடர்ந்தாற்போல,  வேனிலாகிய  சித்திரை முதலிய நான்கற்கு முன்
பின்பனியாகிய மாசியும் பங்குனியுந் தொடர்ந்தவென்று கூறினார்.

உ-ம்:

‘‘பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ
புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
மூகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி.’’    (கலி.31)

இது தனித்தோர்க்குப்  பின்பனி ஆற்றற்கு அரிது, இஃதெவர்க்கும்
ஏதமாம் எனவும், இதனான் இறந்துபடுவே னெனவுங் கூறிற்று.

‘‘அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியு நாளும் பலவா கவ்வே’’            (குறுந். 104)

தலைவி தோழிக்கு உரைத்தது.

இதுவும் அது.

பின்பனிக்கு  நண்பகல்  துன்பஞ்செய்யா  தென்பதூஉம், அதற்குச்
சிறுபொழுது  வரைவில வென்பதூஉங் கூறிற்று; என்னை? சூத்திரத்துத்
‘தான்’ எனத் தனித்து வாங்கிக் கூறினமையின்.                 (10)

பாலைப்பகுதியும் அவற்றிற்குப் பின்பனி உரித்தெனலும்
 

11.
இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.
 

இது பாலைப் பகுதி  இரண்டெனவும் அவ்விரண்டற்கும்  பின்பனி
உரித்தெனவுங் கூறுகின்றது.

(இ-ள்)     இருவகைப்பிரிவும் நிலைபெறத் தோன்றினும் -நான்கு
வருணத்தார்க்குங்  காலிற்  பிரிவும்  வேளாளர்க்குத் கலத்திற் பிரிவுந்
தத்தம்  நிலைமைக்கேற்பத்  தோன்றினும்; உரியது ஆகும் என்மனார்
புலவர்    -   பின்பனிக்காலம்   அவ்விரண்டற்கும்   உரிமைபூண்டு
நிற்குமென்று கூறுவர் புலவர் எ-று.

கடலினை     நிலமென்னாமையிற்  கலத்திற்  பிரிவு  முன்பகுத்த
நிலத்துள்  அடங்காதென்று,  அதுவும்  அடங்குதற்கு  ‘இரு  வகைப்
பிரிவும்’  என்னும் முற்றும்மை கொடுத்துக், காலிற் பிரிவொடு கூட்டிக்
கூறினார்.   கலத்திற்  பிரிவு  அந்தணர்  முதலிய  செந்தீவாழ்நர்க்கு
ஆகாமையின் வேளாளர்க்கே உரித்தென்றார். வேத வணிக ரல்லாதார்
கலத்திற்    பிரிவு    வேதநெறி    யன்மையின்   ஆராய்ச்சியின்று.
இக்கருத்தானே   இருவகை   வேனிலும்   நண்பகலும்   இருவகைப்
பிரிவிற்கும் ஒப்ப உரியவன்றிக் காலிற் பிரிவுக்குச் சிறத்தலுங், கலத்திற்
பிரிவிற்கு இளவேனி லொன்றுங் காற்றுமிகாத முற்பக்கத்துச்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 22:53:59(இந்திய நேரம்)