Primary tabs

இரண்டென்பாராகலின், இவை பத்தும் ஒருதுறையாமென்றற்கும்
இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈரைந்தென வேறொரு தொகை
கொடுத்தார். அவன் தலையல்லது உடம்பினை அவள் பெறாமையின்,
அவன் யாக்கைக்கு நிலையின்மை யெய்தலின், இதுவும் ஆண்பாற்கே
சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும் அதனாலெய்துதலின்
மேல்வருகின்ற பெண் பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார்.
இதற்கியைபு படத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக்காஞ்சியும்
பெண்பாலொடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதலின் முன் வைத்தார்.
இவை ஒருவகையாற் பெண்பாற்கண்ணும் நிலையின்மையுடைய
வாயினும் இரண்டிடத்தும் ஓதிச் சூத்திரம் பல்காமற், சிறப்புடைய
ஆண்மகற்கே ஓதிப் பெண்பாற் பகுதியுந் தழீஇயினா ரென்றுணர்க.
இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும்
ஈரைந் தென்பதனைக் கூட்டி முடிக்க.
உ-ம்:
‘‘நிலையி லுயிரிழத்தற் கஞ்சிக் கணவன்
தலையொழிய மெய்பெறாள் சாய்ந்தாள் - தலையினால்
வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றதன்
உண்ணிறை தன்றோ வுயிர்’’
என வரும்.
பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன்
மயக்கத்தானும் - பெரும்புகழுடையனாகி மாய்ந்தானொருவனைச்
சுற்றிய பெண்கிளைச் சுற்றங் குரல் குறைவுபட்ட கூப்பீட்டு
மயக்கத்தானும்;
என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விரவியெழுந்த ஓசையை.
ஆய்தவென்பது உள்ளத னுணுக்கம். ‘‘மாய்ந்த பூசன் மயக்க’ மென்று
பாடமாயிற், சுற்றம் ஒருங்கு மாய்ந்தவழிப் பிறரழுத பூசன்
மயக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்த
மகனென்றதூஉஞ் சுற்றப்படுவானை அறிவித்தற்கே; ஆண்பாலும்
உடன்கூறியதன்று. மேலனவற்றிற்கும் இஃதொக்கும்.
உ-ம்:
‘‘இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப்
புரவலன் மாய்ந்துழியும் பொங்கு - முரைமயங்க
வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா
தோற்கண்ண போலுந் துடி’’
(தகடூர் யாத்திரை.புறத்திரட்டு.1438.இரங்கல்.3)
என வரும்.
‘‘மீனுண் கொக்கின் றூவியன்ன’’ என்னும் (277) புறப்பாட்டும் அது.
தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும் - அச்சுற்றத்தாருமின்றி
மனைவியர்தாமே தத்தங் கொழுநரைத் தழீஇயிருந்து அழுதது
கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்;
தாமே யெனப் பன்மை கூறினார், ஒருவர்க்குத்

