Primary tabs

முட்காற் காரை முதுபழ னேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலு முண்டக் கள்வெய் யோனே.
திணையும் துறையும் அவை. (வெட்சி, உண்டாட்டு)
.......................உலோச்சனார் பாடியது.
உண்டாட்டாவது:-
‘’தொட்டிமிழுங் கழன்மறவர்
மட்டுண்டு மகிழ்தூங்கின்று’’
(பு. வெ. 15)
(இ-ள்.) முட்டாளையுடைய காரையினது முதிர்ந்த பழத்தையொப்ப
முற்ற விளைந்த இனிய கந்தாரமென்னும் பெயரையுடைய
மதுவையுடைய வேற்றுப்புலத்துத் தான்கொண்டுவந்து நிறுத்தின
நிரையைக் கள்விலைக்கு நேராகக் கொடுத்து உண்டு
செவ்வித்தசையைத் தின்று செவ்விநிணமிக்க எச்சிலாகிய ஈரமுடைய
கையை வில்லினது புறத்தே திமிர்ந்து வேற்று நாட்டின்கட் புக்கானே,
புல்லிய தாடியையுடைய காளை; இவ்விருந்த மறவர் ஒருகால்
உண்பதன்முன்னே பெரிய ஆனிரையை இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக்
கொடுதருகுவன்; யாவர்க்கும் வாராது அதற்பொருட்டுத் தொடுதலைப்
பாதுகாத்துவைப்பாயாக, முதிர்ந்தமதுவையுடைய சாடியை; ஆவைக்
கொண்டுவரக் கலந்த தூளியையுடையனாய் அம்மதுவை விரும்புவோன்
விடாய்த்தலும் உண்டாம்-எ - று.
தலைச்சென்றென்பது, தலைச்செலவெனத்திரிக்கப்பட்டது. இதற்குக்
கள்விலையாட்டியிடத்தே செல்லவென்றுமாம்.
‘தீங்கட்டாரம்’ என்றோதிக் கள்ளாகிய இனிய பண்டமெனினும்
அமையும்.
‘காய்தலுமுண்டு’ என்பதற்குக் கள்வெய்யோனா

