குறிஞ்சி

1. குறிஞ்சி
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
5
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்

5. குறிஞ்சி
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
5
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.-பெருங்குன்றூர்கிழார்

6. குறிஞ்சி
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
5
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
10
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்

8. குறிஞ்சி
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
5
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
10
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.

13. குறிஞ்சி
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்,
5
நல்ல பெருந் தோளோயே! கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியாமன்னோ;
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.

இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்

17. குறிஞ்சி
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
5
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல்,
10
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்

22. குறிஞ்சி
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்
5
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன்; வாழி-தோழி!-உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை,
10
பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே.

வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.

23. குறிஞ்சி
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின்,
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய,
5
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!

தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்

25. குறிஞ்சி
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
5
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
10
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!

தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்

26. பாலை
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே-
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய,
5
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று,
பொன் பொதிந்தன்ன சுணங்கின்,
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே.

தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.-சாத்தந்தையார்

32. குறிஞ்சி
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;
5
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரிய-வாழி, தோழி!-பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.

தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.- கபிலர்

34. குறிஞ்சி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
5
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
10
கடவுள் ஆயினும் ஆக,
மடவை மன்ற, வாழிய முருகே!

தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி

36. குறிஞ்சி
குறுங் கை இரும் புலிக் கோள் வல்ஏற்றை,
பூ நுதல் இரும் பிடி புலம்ப, தாக்கி,
தாழ் நீர் நனந் தலைப் பெரு களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
5
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து,
அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே?

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.- சீத்தலைச்சாத்தனார்

39. குறிஞ்சி
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென;
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
5
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ? அல்ல; நண்ணார்
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன்
10
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்

44. குறிஞ்சி
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய
5
நினக்கோ அறியுநள்-நெஞ்சே! புனத்த
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய
10
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து,
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே?

இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.-பெருங்கௌசிகனார்

47. குறிஞ்சி
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென
5
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு, 'இது என' யான் அது
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து,
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
10
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?

சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்

51. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
5
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
10
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?

ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்

53. குறிஞ்சி
யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது
அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ?
எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?-
'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,
5
ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்;
தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி,
10
முனியாது ஆடப் பெறின், இவள்
பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே!

வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.-நல்வேட்டனார்

55. குறிஞ்சி
ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,
உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
5
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,
கண் கோள் ஆக நோக்கி, 'பண்டும்
இனையையோ?' என வினவினள், யாயே;
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து,
என் முகம் நோக்கியோளே: 'அன்னாய்!-
10
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல்? என, மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி-
ஈங்கு ஆயினவால்' என்றிசின் யானே.

வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவற்குச் சொல்லியது.-பெருவழுதி

57. குறிஞ்சி
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
5
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்
மா மலை நாட! மருட்கை உடைத்தே-
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை, எம்
10
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே!

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்

61. குறிஞ்சி
கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
5
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின்,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
'படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
10
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே.

தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்

64. குறிஞ்சி
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல்-தோழி!-யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
5
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
10
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்

65. குறிஞ்சி
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!-
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,
5
புலியொடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே.

விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்

68. குறிஞ்சி
'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என-
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,
5
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்,
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;
'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து,
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்னி,
10
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே.

சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.-பிரான் சாத்தனார்

75. குறிஞ்சி
நயன் இன்மையின், பயன் இது என்னாது,
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது
5
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல்
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல,
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
10
பைதல் நெஞ்சம் உய்யுமாறே.

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்

77. குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச்
5
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
10
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல்,
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.

பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்

82. குறிஞ்சி
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
5
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே-
போகிய நாகப் போக்கு அருங் கவலை,
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
10
கோள் நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.

தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்

83. குறிஞ்சி
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
5
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.

இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.-பெருந்தேவனார்

85. குறிஞ்சி
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
5
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
10
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!

தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்

88. குறிஞ்சி
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?
வருந்தல்; வாழி!-தோழி!-யாம் சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
5
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்-
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,
கண்ணீர் அருவியாக
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே.

சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்லந்துவனார்

93. குறிஞ்சி
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப்
5
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
10
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.

வரைவு கடாயது.-மலையனார்

95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
5
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து,
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
10
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே.

தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.-கோட்டம்பலவனார்

98. குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
5
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
10
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!

இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.-உக்கிரப் பெருவழுதி

102. குறிஞ்சி
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,
நின் குறை முடித்த பின்றை, என் குறை
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;
5
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு,
நின் கிளை மருங்கின், சேறிஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

காமம் மிக்க கழிபடர்கிளவி.-செம்பியனார்

104. குறிஞ்சி
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
5
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல்-பானாள்,
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
10
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர்
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?

தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்

108. குறிஞ்சி
மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணையக் கண்ட அம் குடிக் குறவர்,
கணையர், கிணையர், கை புனை கவணர்,
5
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!
பழகிய பகையும் பிரிவு இன்னாதே;
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப,
தொடர்பு யாங்கு விட்டனை? நோகோ யானே!

வரையாது நெடுங் காலம்வந்து ஒழுகலாற்றாளாய தோழி, தலைமகளது ஆற்றாமை கூறி வரைவு கடாயது.

112. குறிஞ்சி
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
5
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்

114. குறிஞ்சி
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்,
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்,
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகிக் கேட்டுப் பையாந்திசினே;
5
அளிதோ தானே-தோழி!-அல்கல்
வந்தோன்மன்ற குன்ற நாடன்;
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்;
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
10
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி,
மையல் மடப் பிடி இனைய,
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே.

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது.- தொல்கபிலர்

116. குறிஞ்சி
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று,
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை,
5
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும்
மலை கெழு நாடன் கேண்மை, பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
10
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார், என் திறத்து அலரே!

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்

119. குறிஞ்சி
தினை உண் கேழல் இரிய, புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்,
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை
5
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும்
10
முயங்கல் பெறுகுவன் அல்லன்;
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே.

சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்

122. குறிஞ்சி
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென;
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின;
5
'நரை உரும் உரறும் நாம நள் இருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என
நின்று, மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னொடு
10
நீயே சூழ்தல் வேண்டும்-
பூ வேய் கண்ணி!-அது பொருந்துமாறே.

சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச்சொல்லியது.-செங்கண்ணனார்

125.குறிஞ்சி
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி, கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
5
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என,
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
10
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை,
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.

வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

128. குறிஞ்சி
'பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
5
அது கண்டிசினால் யானே' என்று, நனி
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
10
அஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.

குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.- நற்சேந்தனாா

129. குறிஞ்சி
பெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
5
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.-ஒளவையார்

133. குறிஞ்சி
'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;
நுதலும் பசலை பாயின்று-திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
5
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று,
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-
காமுறு தோழி!-காதல்அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த
10
தோய் மடற் சில் நீர் போல,
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.

வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்

134. குறிஞ்சி
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி!
5
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என,
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர்,
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
10
ஒல்லேன் போல உரையாடுவலே!

'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.

136. குறிஞ்சி
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை-வாழிய, பலவே!-பன்னிய
5
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே.

சிறைப்புறமாகத்தலைவி தோழிக்கு உரைத்தது.-நற்றங் கொற்றனார்

140. குறிஞ்சி
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த
சிறு கோல் இணர பெருந் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகை பெற வாரி,
புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப்
5
பெருங் கண் ஆயம் உவப்ப, தந்தை
நெடுந் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து,
பந்தொடு பெயரும் பரிவிலாட்டி
அருளினும், அருளாள் ஆயினும், பெரிது அழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே!-என்னதூஉம்
10
அருந் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

குறை மறுக்கப்பட்ட தலைவன் தன் நெஞ்சினை நெருங்கியது.-பூதங்கண்ணனார்

144. குறிஞ்சி
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
5
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப்
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,
விரவு மலர் பொறித்த தோளர்
10
இரவின் வருதல் அறியாதேற்கே.

ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

146. குறிஞ்சி
வில்லாப் பூவின் கண்ணி சூடி,
'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!-
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
5
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து,
இருந்தனை சென்மோ-'வழங்குக சுடர்!' என,
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
10
ஐயள், மாயோள், அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே!

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்

147. குறிஞ்சி

  யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்!
  தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
  செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
  எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,
5 அன்னை ஆனாள் கழற, முன் நின்று,
  'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
  அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
  வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
  சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
10 பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு,
  தலை இறைஞ்சினளே அன்னை;
  செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?
 

சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்

151. குறிஞ்சி
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும்,
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச்
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
5
வாரற்கதில்ல-தோழி!-கடுவன்,
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த
செம் முக மந்தி செய்குறி, கருங் கால்
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர்,
10
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன்
புன் தலைப் பாறு மயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவினானே!

இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்

154. குறிஞ்சி
கானமும் கம்மென்றன்றே; வானமும்
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஓவாதே;
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த
5
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ-இல, தூவிலாட்டி!-
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர்
10
வாரார் ஆயினோ நன்றே; சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே?

இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது.- நல்லாவூர் கிழார்

156. குறிஞ்சி
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!-
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்
5
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால்,
பகல் வந்தீமோ, பல் படர் அகல!
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்;
பாடு இமிழ் விடர் முகை முழங்க,
10
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே.

இரவுக்குறி மறுத்தது.-கண்ணங் கொற்றனார்

158. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! நம்வயின்,
யானோ காணேன்-அதுதான் கரந்தே,
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே;
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே-
5
விடர் முகைச் செறிந்த வெஞ் சின இரும் புலி
புகர் முக வேழம் புலம்பத் தாக்கி,
குருதி பருகிய கொழுங் கவுட் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே.

ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப்புறமாகச் சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்

160. குறிஞ்சி
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென்மன்னே-கம்மென
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை
5
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்,
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
10
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே.

கழற்று எதிர்மறை.

165. குறிஞ்சி
அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து, கானவன்,
'அணங்கொடு நின்றது மலை, வான் கொள்க' எனக்
கடவுள் ஓங்கு வரை பேண்மார், வேட்டு எழுந்து,
5
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்தோறும், அருமை தனக்கு உரைப்ப,
'நப் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு
அன்ன ஆகுக' என்னான்;
ஒல்காது ஒழி; மிகப் பல்கின தூதே.

நொதுமலர் வரையும் பருவத்து, தோழி தலைவிக்கு அறத்தொடு நிலை பயப்பச் சொல்லியது; வரைவு மலிந்ததூஉம் ஆம்.

168. குறிஞ்சி
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
5
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ-
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்,
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள்,
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
10
ஆரம் கமழும் மார்பினை,
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே?

தோழி இரவுக்குறி மறுத்தது.

173. குறிஞ்சி
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்,
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,
வெறி என உணர்ந்த அரிய அன்னையை,
5
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய்
என்னினும் வாராது; மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின்,
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?-
10
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே.

தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.

176. குறிஞ்சி
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின்
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள்
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!-
5
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப்
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள்
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ,
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு,
அருவி முழவின் பாடொடு ஒராங்கு,
10
மென்மெல இசைக்கும் சாரல்,
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே.

பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.

182. குறிஞ்சி
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று;
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்,
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்;
5
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு,
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல,
கண்டனம் வருகம் சென்மோ?-தோழி!-
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல,
10
தமியன் வந்தோன், பனியலை நீயே!

வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.

185. குறிஞ்சி
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,
காமம் கைம்மிக, கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின்-பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
5
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி,
இரவலர் மெலியாது ஏறும், பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்,
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
10
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே.

பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.

188. குறிஞ்சி
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை,
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல, காந்தள்
5
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப!
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என,
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே.

பகற்குறி மறுத்து வரைவு கடாயது.

190. குறிஞ்சி
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,
5
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய,
வலை மான் மழைக் கண், குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே!

பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.

192. குறிஞ்சி
'குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
5
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை,
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
10
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.

இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

194. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,
5
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத்
தனி நிலை இதணம் புலம்பப் போகி,
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,
குன்ற வெற்பனொடு நாம் விளையாட,
இரும்பு கவர்கொண்ட ஏனற்
10
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே?

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்

201.குறிஞ்சி
'மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,
5
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்

204. குறிஞ்சி
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?
5
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக்
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என,
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து,
தான் செய் குறி நிலை இனிய கூறி,
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு,
10
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி,
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?

பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-மள்ளனார்

206. குறிஞ்சி
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த்
5
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!-
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்?
10
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்

209. குறிஞ்சி
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
5
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும்காலைஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!

குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்

213. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,
'கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி, அயலது
5
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என,
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
10
கொய் புனம் காவலும் நுமதோ?-
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே!

மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

217. குறிஞ்சி
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
5
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு
புலம்பு சேண் அகல நீக்கி,
புலவி உணர்த்தல் வன்மையானே.

தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.

220. குறிஞ்சி
சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
5
பெரிதும் சான்றோர்மன்ற-விசிபிணி
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
'ஊரேம்' என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
10
அயலோர் ஆகல்' என்று எம்மொடு படலே!

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்.-குண்டுகட்பாலியாதனார்

222. குறிஞ்சி
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்
கை புனை சிறு நெறி வாங்கி, பையென,
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று,
5
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச்
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்,
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது,
பெருங் களிறு பிளிறும் சோலை அவர்
10
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே?

தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்

225. குறிஞ்சி
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
5
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்

228. குறிஞ்சி
என் எனப்படுமோ-தோழி!-மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
5
அருளான்கொல்லோ தானே-கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?

தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது.-முடத்திருமாறனார்

232. குறிஞ்சி
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
5
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும்
மா மலை நாட!-காமம் நல்கென
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.

பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்

233. குறிஞ்சி
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
5
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே.

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்

234. குறிஞ்சி
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
5
அஃது ஆன்று
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.

செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.

236. குறிஞ்சி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே-
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,
5
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை, இனி-வாழி, தோழி!-புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
10
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.

தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.-நம்பி குட்டுவன்

244. குறிஞ்சி
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
5
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ-
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ-
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!-
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
10
செயலை அம் தளிர் அன்ன, என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்

247. குறிஞ்சி
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
5
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!

'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.-பரணர்

251. குறிஞ்சி
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா, யாம், அவன்
5
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து,
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்;
10
தோடு இடம் கோடாய், கிளர்ந்து,
நீடினை விளைமோ! வாழிய, தினையே!

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரைப் பெருமருதிள நாகனார்

253. குறிஞ்சி
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினை,
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய், நினையினை, நீ நனி:
5
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள்,
பேர் இசை உருமொடு மாரி முற்றிய,
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி,
பலவு உறு குன்றம் போல,
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே.

செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்

255. குறிஞ்சி
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
5
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!-
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல-
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
10
திருமணி அரவுத் தேர்ந்து உழல,
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!

ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்

257. குறிஞ்சி
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்-
5
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட!-நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
10
நடு நாள் வருதி; நோகோ யானே.

தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.-வண்ணக்கன் சோருமருங்குமரனார்

259. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
5
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்-விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
10
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?

தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்

261. குறிஞ்சி
அருளிலர்வாழி-தோழி!-மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்,
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி,
5
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து,
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை,
எருவை நறும் பூ நீடிய
10
பெரு வரைச் சிறு நெறி வருதலானே.

சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது;தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்.-சேந்தன் பூதனார்

265. குறிஞ்சி
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்
5
பாரத்து அன்ன-ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன-
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

268. குறிஞ்சி
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த
5
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்
காதல் செய்தவும் காதலன்மை
யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே.

தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், 'அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉம் ஆம்.-வெறி பாடிய காமக்கண்ணியார்

273. குறிஞ்சி
இஃது எவன்கொல்லோ- தோழி!-மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, 'வெறி' என,
5
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
10
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?

தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், 'நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்' என்பது படச் சொல்லியது.-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

276. குறிஞ்சி
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்' என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
5
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே-பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
10
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.

பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.-தொல் கபிலர்

282. குறிஞ்சி
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
5
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின், நன்றுமன்-சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-நல்லூர்ச் சிறு மேதாவியார்

285. குறிஞ்சி
அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும்-உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,
5
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,
வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி-தோழி!-என்றும்,
10
அயலோர் அம்பலின் அகலான்,
பகலின் வரூஉம், எறி புனத்தானே.

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்ப, 'அம்ப லும் அலரும் ஆயிற்று' என்று சொல்லியது.- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

288. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
5
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந்
10
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே?

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்

292. குறிஞ்சி
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானம் என்னாய்;
5
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன்-ஐய!-மை கூர் பனியே!

இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்

294. குறிஞ்சி
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு,
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ;
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று,
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும்,
5
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைக் கோடு கண்டன்ன,
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே!

மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

297. குறிஞ்சி
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
5
'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை;
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை
10
மையல் உறுகுவள், அன்னை;
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே.

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்.- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

301. குறிஞ்சி
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
5
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,
பாவை அன்ன வனப்பினள் இவள்' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.

சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி

304. குறிஞ்சி
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
5
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
10
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்

306. குறிஞ்சி
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
'குளிர் படு கையள் கொடிச்சி செல்க' என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
5
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல்
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல்
10
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்

309. குறிஞ்சி
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக்
5
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்,
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று' என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.

'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்

313. குறிஞ்சி
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ,
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப,
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ,
5
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின்
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து
10
அருவியின் ஒலித்தல் ஆனா,
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே.

தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

317. குறிஞ்சி
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
5
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து
என் ஆகுவகொல்தானே-எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி,
ஆயமொடு குற்ற குவளை
10
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே?

தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

322. குறிஞ்சி
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து,
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,
5
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது,
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
10
அணங்கு என உணரக் கூறி, வேலன்
இன் இயம் கறங்கப் பாடி,
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே.

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.-மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்

324. குறிஞ்சி
அந்தோ! தானே அளியள் தாயே;
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?-
கோடு முற்று யானை காடுடன் நிறைதர,
5
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே!

தலைமகன், பாங்கற்குச் சொல்லியது; இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்

326. குறிஞ்சி
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
5
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
10
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே.

தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்

328. குறிஞ்சி
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,
சிற்சில வித்திப் பற்பல விளைந்து,
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன்
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால்,
5
அது இனி வாழி-தோழி!-ஒரு நாள்,
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு,
பெரும் பெயல் தலைக, புனனே!-இனியே,
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல்,
10
விலங்கு மலை அடுக்கத்தானும்,
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே.

தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.-தொல் கபிலர்

332. குறிஞ்சி
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ-
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்
5
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை,
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
10
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

334. குறிஞ்சி
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,
5
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்-
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்,
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி;
மின்னு வசி விளக்கத்து வருமெனின்,
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே?

தோழி இரவுக்குறி முகம் புக்கது.

336. குறிஞ்சி
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
5
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி,
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
10
இரை தேர் எண்கினம் அகழும்
வரை சேர் சிறு நெறி வாராதீமே!

ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்

339. குறிஞ்சி
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்;
அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
5
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி,
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல்
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ,
மின் நேர் ஓதி இவளொடு, நாளை,
10
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித்
தெண் நீர் மணிச் சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே?

சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்

341. குறிஞ்சி
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்
5
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
10
துணை இலேம், தமியேம், பாசறையேமே.

வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

344. குறிஞ்சி
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின்-ஆயிழை!-
5
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும்கொல் தானே-உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி
10
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து,
செந் தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?

தோழி சிறைப்புறமாகத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்

347. குறிஞ்சி
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்,
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,
வான் புகு தலைய குன்றம் முற்றி,
5
அழி துளி தலைஇய பொழுதில், புலையன்
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,
அருவி இழிதரும் பெரு வரை நாடன்,
'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
10
வேனில் தேரையின் அளிய,
காண வீடுமோ-தோழி!-என் நலனே?

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.-பெருங்குன்றூர் கிழார்

351. குறிஞ்சி
'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை
அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
5
வருந்தல் வாழி-வேண்டு, அன்னை!-கருந் தாள்
வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த
களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து,
சிறு தினை வியன் புனம் காப்பின்,
பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே.

தோழி அருகு அடுத்தது.-மதுரைக் கண்ணத்தனார்

353. குறிஞ்சி
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
5
கல் கெழு குறவர் காதல் மடமகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம்
காமம் கனிவதுஆயினும், யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
10
வெஞ் சின உருமின் உரறும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.

தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்

355. குறிஞ்சி
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்
5
செம் முக மந்தி ஆரும் நாட!
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ
10
என் கண் ஓடி அளிமதி-
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே!

தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.

356. குறிஞ்சி
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
5
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்
அசைவு இல் நோன் பறை போல, செல வர
வருந்தினை-வாழி, என் உள்ளம்!-ஒரு நாள்
காதலி உழையளாக,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே?

வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்

357. குறிஞ்சி
நின் குறிப்பு எவனோ?-தோழி!-என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே-
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
5
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
10
சாரல் நாடனொடு ஆடிய நாளே.

தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-குறமகள் குறியெயினி

359. குறிஞ்சி
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது
5
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின்,
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப்
போருடை வருடையும் பாயா,
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?

தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்

365. குறிஞ்சி
அருங் கடி அன்னை காவல் நீவி,
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
பகலே, பலரும் காண, வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி,
5
சென்மோ வாழி-தோழி!-பல் நாள்
கருவி வானம் பெய்யாதுஆயினும்,
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை,
'சான்றோய் அல்லை' என்றனம் வரற்கே.

தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,'இன்னது செய்தும்' என்பாளாய்ச் சொல்லியது.-கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

368. குறிஞ்சி
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
5
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும், நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி,
வெய்ய உயிர்த்தனள் யாயே-
10
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே!

தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்

373. குறிஞ்சி
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி,
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
5
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி,
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
பா அமை இதணம் ஏறி, பாசினம்
வணர் குரற் சிறு தினை கடிய,
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே?

செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்

376. குறிஞ்சி
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை,
வரையோன் வண்மை போல, பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!
5
குல்லை, குளவி, கூதளம், குவளை,
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை
10
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி,
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே?

தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்

377. குறிஞ்சி
மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,
5
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ-
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல,
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது.-மடல் பாடிய மாதங்கீரனார்

379. குறிஞ்சி
புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய
5
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி
எழுது எழில் சிதைய அழுத கண்ணே,
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த,
பெயல் உறு நீலம் போன்றன விரலே,
10
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது,
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே.

தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்

383. குறிஞ்சி
கல் அயற் கலித்த கருங் கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப் புனிற்று இரும் பிணப் பசித்தென, வயப் புலி
புகர் முகம் சிதையத் தாக்கி, களிறு அட்டு,
5
உரும் இசை உரறும், உட்குவரு நடு நாள்,
அருளினை போலினும், அருளாய் அன்றே-
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு,
ஓங்கு வரை நாட! நீ வருதலானே.

தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.-கோளியூர்கிழார் மகனார் செழியனார்

386. குறிஞ்சி
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
5
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்.
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ,
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என,
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
10
வதுவை என்று அவர் வந்த ஞான்றே.

பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப

389. குறிஞ்சி
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்-
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
5
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென,
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ' என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
10
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.

பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

393. குறிஞ்சி
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க,
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
5
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
10
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன்,
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும், நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?

வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்

396. குறிஞ்சி
பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
5
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள்
10
காமர் நனி சொல் சொல்லி,
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?

தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.

399. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய
5
நிலவரை நிவந்த பல உறு திரு மணி
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி,
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
10
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே?

நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல