141-150

141. குறிஞ்சி
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே, அன்னை'' என, நீ
சொல்லின் எவனோ?-தோழி!-''கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ'' எனவே.

இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பெருங்கொல்லன்

142. குறிஞ்சி
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்

143. குறிஞ்சி
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்;
பழியும் அஞ்சும், பய மலை நாடன்;
நில்லாமையே நிலையிற்று ஆகலின்,
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.

வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

144. பாலை
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ-
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்

145. குறிஞ்சி
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி-
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.

வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கொல்லன் அழிசி

146. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
''நன்றுநன்று'' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.

தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, ''வரைவு மறுப்பவோ?'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார்.

147. பாலை
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி-கனவே!-
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.

தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன்

148. முல்லை
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
''கார் அன்று'' என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார்.

149. பாலை
அளிதோ தானே-நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.

உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

150. குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்!

இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. - மாடலூர் கிழார்