171-180

171. மருதம்
காண் இனி வாழி-தோழி-யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டாஅங்கு,
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே?

வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார்

172. நெய்தல்
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர்கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.

வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார்

173. குறிஞ்சி
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப,
''இன்னள் செய்தது இது'' என, முன் நின்று,
அவள் பழி நுவலும், இவ் ஊர்;
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே.

குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன்

174. பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி

175. நெய்தல்
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி,
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை,
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன்-தோழி!-''ஈங்கு என் கொல்?'' என்று,
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?

பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன்.

176. குறிஞ்சி
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்;
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே-
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ?
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.

தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது. - வருமுலையாரித்தி

177. நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?

கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன்

178. மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர்; நோகோ யானே.

கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை

179. குறிஞ்சி
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.

பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன்

180. பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?

பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார்