291-300

291. குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, ''அவள் விளி'' என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.

பாங்கற்கு உரைத்தது. - கபிலர்

292.குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.

தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர்

293. மருதம்
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
வருமே சேயிழை, அந்தில்
கொழுநற் காணிய; அளியேன் யானே!

பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன்

294. நெய்தல்
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும்,
நொதுமலர் போலக் கதுமென வந்து,
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே,

பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.- அஞ்சில் ஆந்தை

295. நெய்தல்
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.

வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி

296. நெய்தல்
அம்ம வாழி-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி-''தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?'' என்றனை துணிந்தே.

காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன்

297. குறிஞ்சி
''அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி,
புணர்ந்து உடன் போதல் பொருள்'' என,
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே.

தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்.

298. குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.

கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர்

299. நெய்தல்
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?

சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி

300. குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார்