14. உண்டாட்டு

 

இதன்கண், அவ்வளமலைச்சாரல் வருணனையும், அதன்கண் உதயணகுமரன் வாசவதத்தையோடும் பிற மாந்தருடனும் உண்டாட்டுஅயர்தலும் பிறவும் கூறப்படும்,

 
              ஆடுதல் ஆனா அளப்பினன்ஆகி
            நாடுதலை மணந்த நன்நகர் நினையான்
            மாயோன் மார்பின் மன்னுபு கிடந்த
            ஆரம்போல அணிபெறத் தோன்றிப்
        5   பசும்பொன் தாதொடு பன்மணி வரன்றி
            அசும்புசோர் அருவரை அகலம் பொருந்தி
            ஞால மாந்தரை நாணி அன்ன
            நடுங்குசெலல் கான்யாற்றுக் கடும்புனல் ஆடி
 
              மணிநிழல் பாறை மரங்கில் பல்கி
       10   அணிகலப் பேழை அகந்திறந் தன்ன
            நறுமலர் அணிந்த குறுவாய்க் குண்டுசுணை
            நீள்நீர் முழவின் பாணியில் பாடியும்
            குழையர் கோதையர் இழையர் ஏரிணர்த்
            தழையர் தாரினர் உழைவயின் பிரியார்
       15   பல்வகை மகளிரொடு செல்வம் சிறந்தும்
 
              கான்உறை மகளிரின் கவின்பெறத் தோன்றித்
            தேன்உறை சிலம்பின் தானம் தோறும்
            விரவுமலர்க் கோதையர் வேறுவேறு இயலிக்
            குரவம் பாவைகொண்டு ஓலுறுத்து ஆடியும்
       20   விரிந்துவேய் உடைத்த வெண்கதிர் முத்தம்
            தெரிந்துவேறு அமைத்துச் சிற்றில் இழைத்தும்
            பூங்கண் பாவைக்குப் பொன்கலம் இவைஎனத்
            தேங்கட் சாரல் திருந்துசினை மலர்ந்த
            கோங்கந் தட்டம் வாங்கினர் வைத்தும்
       25   செப்படர் அன்ன செங்குழைப் பிண்டிக்
            கப்புடைக் கவிசினை நற்புடை நான்ற
            தழைக்கயிற்று ஊசல் விருப்பில் தூக்கியும்
 
              பைங்கொடி முல்லை வெண்போது பறித்தும்
            கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும்
       30   சித்திர மாகச் செந்தளிர் வாங்கிப்
            பத்திரச் சேதம் பற்பல கிள்ளியும்
            உறியோர்க்கு உதவுதல் செல்லாது ஒய்யெனச்
            சிறியோர் உற்ற செல்வம் போலப்
            பொருசிறை வண்டினம் பொருந்தாது மறக்க
       35   நறுமலர்ச் செல்வமொடு நாட்கடி கமழும்
            செண்பகச் சோலைந் தண்டழை தைஇயும்
 
              பேறுஅருங் கற்பின் பிரச்சோ தனன்மகள்
            மாறடு வேல்கண் வாசவ தத்தை
            செல்வமும் சிறப்பும் பல்லூழ் பாடிக்
       40   குராஅ நீழல் கோல்வளை ஒலிப்ப
            மார அங் குரவை மகிழ்ந்தனர் மறலியும்
            ஆடுபொன் கிண்கிணி அடிமிசை அரற்ற
            நீடி அன்ன நிழல்அறை மருங்கில்
            பந்தெறிந்து ஆடியும் பாவை புனைந்தும்
       45   அந்தளிர்ப் படைமிசை அயர்ந்தனர் ஒடுங்கியும்
 
              ஏனல் குறவர் இருங்குடிச் சீறூர்
            மான்அமர் நோக்கின் மகளிரொடு மரீஇ
            வெங்கண் மறவர் வில்லின் வீழ்த்த
            பைங்கண் வேழத்துப் பணைமருப்பு உலக்கையின்
       50   அறையுரல் நிறைய ஐவனப் பாசவல்
            இசையொடு தன்ஐயர் இயல்புபுகழ்ந்து இடிக்கும்
            அம்மனை வள்ளை.இன்இசை கேட்டும்
            கோயில் மகளிர் மேயினர் ஆடப்
 
              பொருவில் போகமொடு ஒருமீக் கூறிய
       55   உருவப் பூந்தார் உதயண குமரனும்
            வள்ளியம் பணைத்தோள் முள்எயிற்று அமர்நகை
            வான்மணிக் கொழும்பூண் வாசவ தத்தையும்
            இயல்பில் செய்ய ஆயினும் உயர்வரை
            அருவி ஆட்டினும் அறல்சுனைத் திளைப்பினும்
       60   பூங்குழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
            தேங்கமழ் தேறலொடு தெளிமது மடுப்பினும்
            தாமரைச் செவ்இதழ்த் தலைக்கேழ் விரித்த
            காமர் நெடுங்கண் கைம்மீச் சிவப்பக்
            கனிந்த காதலொடு முனிந்து..........
       65   மயக்கம் ஆகி முயக்கம் இல்லாது
            பிரிவுஅரும் புள்ளின் ஒருமையின் ஒட்டி
            வண்டார் சோலை வளமலைச் சாரல்
            உண்டாட்டு அயர்பவால் உவகையுள் மகிழ்ந்துஎன்