4.5 தொகுப்புரை

அன்பு மாணவரே, இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டோம் என்று ஒரு முறை எண்ணிப் பாருங்கள். பண்புகளால் மிக உயர்ந்தோரை மட்டுமே பாராட்டிப் பாடும் இயல்பு கொண்ட சங்கப் புலவர்கள் படைத்த புறத்திணை சார்ந்த இலக்கியங்களில் மிகச் சிறந்தது ஆற்றுப்படை என்பதை உணர்ந்திருப்பீர்கள். புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான புறநானூற்றிலும், பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் பாடிய தொகை நூலான பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைத் துறையில் அமைந்த பாடல்கள் பல உள்ளன என அறிந்தீர்கள். நெடும் பாட்டுகளான பத்துப்பாட்டில் சரிபாதியாக ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படைகளாக விளங்குவதை அறிந்தீர்கள். புலவர், பாணர், பொருநர், கூத்தர், விறலியர் போன்ற கலைஞர்கள் தமக்குள் துறைப்பகைமை பாராட்டாமல் அன்பு பாராட்டி வாழ்வில் வளம்பெற ஒருவருக்கொருவர் வழிகாட்டியதாக அமையும் உயர்ந்த பண்பாட்டை ஆற்றுப்படை இலக்கியம் காட்டுவதைக் கண்டீர்கள். இத்தகைய ‘பண்பாட்டு இலக்கியம்’ தமிழில் அன்றி உலகில் வேறெங்கும் இல்லை என்ற பெருமையை உணர்ந்தீர்கள். ஆற்றுப்படையாக அமைந்த பாடல்கள், அவற்றில் பாடப்பெற்ற பெருந்தகைகள், பாடிய புலவர்கள் கொண்ட சிறப்புகளையெல்லாம் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து மகிழ்ந்தீர்கள். விளக்கமாகப் புரிந்து கொள்ள இந்த அரிய இலக்கியங்களை மின்னூலகத்தில் தேடிப் படித்துப் பயன் பெறுங்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
சங்க இலக்கியத்துப் பத்துப்பாட்டில் ஆற்றுப்படையாக அமைந்தவை எத்தனை?
(விடை)
2.
திருமுருகாற்றுப்படைக்கு அமைந்த வேறு பெயர்கள் எவை? (விடை)
3.
தமிழ் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையில் திருமுருகாற்றுப்படை பிற இலக்கியங்களில் இருந்து எவ்வகையில் வேறுபடுகிறது? (விடை)
4.
பொருநர் என்னும் சொல் தரும் இரு பொருள்கள் யாவை? (விடை)
5.
இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால் பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப் பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது? (விடை)
6.
பாலை யாழின் தோற்றத்திற்கு முடத்தாமக் கண்ணியார் கூறும் உவமை யாது? (விடை)
7.
கரிகாலன் வழங்கிய ஊன் உணவை உண்டதால் பொருநரின் பற்களுக்கு என்ன நேர்ந்தது? (விடை)
8.
வள்ளல்களின் நிலவளத்தை விளக்கச் சங்கப் புலவர் நால்வகை நிலங்களும் கலந்திருப்பதாகப் பாடும் புலமை மரபுக்குப் பெயர் என்ன? (விடை)
9.
பொருநர் பாலை யாழை மீட்டிப் பாலைப் பண்பாடும் போது என்ன நிகழும்? (விடை)
10.
நல்லியக் கோடனின் கொடையிற் சிறந்த கையைப் பற்றிச் சிறுபாணாற்றுப்படை எவ்வாறு
குறிப்பிடுகிறது?
(விடை)
11.
சிறுபாணன் குப்பைக் கீரை உணவை உண்டபோது வீட்டுக்கதவை ஏன் அடைத்தான்? அதற்காக ஏன் வருந்தினான்? (விடை)
12.
தொண்டைமான் இளந்திரையனின் ஆட்சிச் சிறப்புப் பற்றிப் பெரும்பாணன் உரைத்தவை
யாவை?
(விடை)
13.
இளந்திரையன் பெரும்பாணனுக்குப் பரிசிலாக எவற்றை வழங்குகிறான்? (விடை)
14.
வழி வருணனையில் பிற ஆற்றுப்படைகளில் இல்லாத புதுமையாக மலைபடுகடாம் நூலில் உள்ள சிறப்பு யாது? (விடை)
15.
'மலைபடுகடாம்’ - பெயர்ச்சிறப்பை எடுத்துரைக்க. (விடை)