எழுத்தும் சொல்லும்
பாடம்
Lesson
● சார்பெழுத்தின் வகைகள்
சார்பெழுத்துகள் மொத்தம் பத்து ஆகும். உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவே அவை.
இவற்றுள், உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் என்னும் நான்கின் விளக்கங்களை சான்றிதழ்க் கல்வி முதல் நிலையில் கற்று உணர்ந்தீர்கள்.
இப்பாடப் பகுப்பு எஞ்சிய ஆறு வகைச் சார்பெழுத்துகளைப் பற்றியதாக அமைகிறது. அவற்றைப் பொதுநிலையில் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிக் காணலாம்.
● I. அளபெடை
● உயிரளபெடை
● ஒற்றளபெடை
● II. குறுக்கம்
● ஐகாரக் குறுக்கம்
● ஒளகாரக் குறுக்கம்
● மகரக் குறுக்கம்
● ஆய்தக் குறுக்கம்
● III. அளபெடை
தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் உச்சரிப்பதற்குரிய காலஅளவு உண்டு. அதனை மாத்திரை என்று குறிப்பிடுவர். அத்தகு மாத்திரை தன் அளவுடன் அதிகமாகி ஒலிப்பது அளபெடை எனப்பெறும். உயிர், மெய் என்னும் இருவகை எழுத்துகளும் அவ்வாறு இயல்பான அளவில் இருந்து அதிகரித்து ஒலிக்கும். அதுவே அளபெடை எனப்பெறும். எனவே, அளபெடை இரண்டாகிறது. அவை
● உயிரளபெடை
● ஒற்றளபெடை
● உயிரளபெடை
உயிரெழுத்துகளில் குறில், நெடில் என்னும் இரு வகைகள் உண்டு. குறில் எழுத்துக்குரிய அளவு ஒரு மாத்திரையாகும். அவ்வாறே நெடில் எழுத்துக்குரிய அளவு இரண்டு மாத்திரையாகும். சில நேரங்களில் ஓர் உயிர் எழுத்தை இரண்டு மாத்திரை அளவிற்கு, அதிகமாக ஒலிக்கவேண்டியத் தேவை ஏற்படும். அப்போது நெடில் உயிர்எழுத்துகளை மேலும் நீட்டி ஒலிப்பர். அதுவே உயிர் அளபெடை எனப்பெறும். அளபெடை அமைந்ததற்கு அடையாளமாக உயிர்நெடில் எழுத்துக்கு அருகில் உயிர்க்குறில் எழுத்து கூடுதலாக இடம்பெறும்.
● உயிரளபெடை வகைகள்
நெடில் உயிர்எழுத்துகளை நீட்டி ஒலிக்கும் அளபெடை மூன்று காரணங்களால் அமைகிறது. எனவே உயிரளபெடை மூன்று வகைபெறும்.
வ. எண் | காரணம் | வகை | எடுத்துக்காட்டு | விளக்கம் |
1. | செய்யுள் இலக்கணத்திற்குரிய ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்வது. | இசைநிறை அளபெடை | ஏரின் உழாஅர் உழவர் நற்றாள் தொழாஅர் எனின் | உழார், தொழார் என்று அமைந்தால் ஓரசையாகி இலக்கணப் பிழை ஏற்படும். அதை மாற்றி ஈரசையாக்க அளபெடை அமைந்தது. |
2. | செய்யுள் இலக்கணத்திற்குரிய ஓசை குறையாத போதும் இனிய இசையை ஏற்படுத்துவது | இன்னிசை அளபெடை | கெடுப்பதூஉம் எடுப்பதூஉம் | கெடுப்பதும், எடுப்பதும் என்று அமைந்தாலும் இலக்கணப் பிழை ஏதும் இல்லை. எனினும் இனிய இசைக்காக அளபெடை அமைந்தது. |
3. | பெயர்ச்சொல்லை வினையெச்சமாகப் பொருள் மாற்றம் செய்வது | சொல்லிசை அளபெடை | நசை - நசைஇ | நசை என்னும் பெயர்ச்சொல்லுக்கு விருப்பம் என்று பொருள். அதனை ‘விரும்பி’ என்னும் வினையெச்சமாக மாற்ற அளபெடை அமைந்தது. |
● ஒற்றளபெடை
கலங்கு நெஞ்சம் | கல ங்ங்குநெஞ்சம். |
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் இரண்டையும் உற்று நோக்கவும்.
முதல் எடுத்துக்காட்டில் ஒருமுறை இடம்பெற்ற ங் என்னும் ஒற்று (மெய்) எழுத்து அடுத்த எடுத்துக்காட்டில் இருமுறை இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட கலங்கு என்னும் சொல் செய்யுளில் இடம்பெறும்போது ஓசை அளவு குறைவாக அமையும். அதை மாற்றி ஓசையை நிறைவு செய்வதற்காக, கலங்ங்கு என்று இருமுறை மெய்யெழுத்தை அமைத்தனர்.
ங் என்னும் மெய்யெழுத்து இரண்டாம்முறை இடம்பெற்றதே அளபெடை அமைந்ததற்கான அடையாளமாகும்.
இவ்வாறு செய்யுளின் ஓசைக்காக மெய்யெழுத்துகளும் தமக்குரிய அரைமாத்திரை அளவினைவிட அதிகமாக ஒலிப்பதை ஒற்றளபெடை என்பர்.
● குறுக்கம்
ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவினைவிட அதிகமாக ஒலிப்பதை அளபெடை என்று கண்டோம். அவ்வாறே ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரைஅளவினைவிடக் குறைவாக ஒலிப்பதைக் குறுக்கம் என்பர்.
● குறுக்கம் - வகைகள்
உயிர் எழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என்னும் மூவகை எழுத்துகளும் குறுகி ஒலிப்பது உண்டு. எனவே குறுக்கம் என்னும் சார்பெழுத்தை ஆறு வகையாக வழங்குவர். அவையாவன:
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக் குறுக்கம்
- ஒளகாரக் குறுக்கம்
- மகரக் குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
குறிப்பு: மேற்கண்ட ஆறு வகைகளுள் முதல் இரண்டையும் பற்றி சான்றிதழ் முதல் நிலையில் கற்று உணர்ந்தோம். இப்பாடப்பகுப்பில் எஞ்சிய நான்கையும் பற்றி அறிவோம்.
● ஐகாரக் குறுக்கம்
ஐந்து | வளையல் | கலை |
மேற்கண்ட மூன்று சொற்களையும் உற்று நோக்குங்கள். ஒலித்துப் பாருங்கள்.
மூன்றிலும் ஐ என்னும் எழுத்து இடம்பெற்றுள்ளது.
முதல் எடுத்துக்காட்டில் சொல்லின் தொடக்கத்தில் ஐ அமைந்துள்ளது.
இரண்டாம் எடுத்துக்காட்டில் சொல்லின் இடையில் ஐ (ளை = ள்+ஐ) அமைந்துள்ளது.
மூன்றாம் எடுத்துக்காட்டில் சொல்லின் இறுதியில் ஐ ( லை = ல் + ஐ ) அமைந்துள்ளது.
ஐ என்னும் எழுத்துக்கு உரிய அளவு இரண்டு மாத்திரை ஆகும்.
ஆனால், இம் மூன்று எடுத்துக்காட்டுகளிலும் இடம்பெற்ற ஐ என்னும் உயிர்நெடில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவினைவிடக் குறைந்து ஒலிக்கிறது. அதுவே ஐகாரக் குறுக்கம் ஆகும். மொழி முதல், மொழி இடை, மொழி இறுதி என்னும் மூன்று இடங்களிலும் இடம்பெறும் ஐகாரம் குறுகி ஒலிப்பதால் அது மூவகைபெறும்.
● ஒளகாரக் குறுக்கம்
ஒளவை | கௌவை |
மேற்கண்ட இரண்டு சொற்களையும் உற்று நோக்குங்கள். ஒலித்துப் பாருங்கள்.
இரண்டிலும் ஒள என்னும் எழுத்து இடம்பெற்றுள்ளது.
முதல் எடுத்துக்காட்டில் சொல்லின் தொடக்கத்தில் ஒள அமைந்துள்ளது.
இரண்டாம் எடுத்துக்காட்டில் சொல்லின் முதலில் மெய்யெழுத்துடன் கூடி (க்+ஒள=கௌ) ஒள அமைந்துள்ளது.
இவ்விரு இடங்களிலும் இடம்பெற்றது ஒள என்னும் உயிர்நெடில் ஆகும். அதனை ஒளகாரம் என்பர்.
அது தனக்குரிய இரண்டுமாத்திரை அளவில் குறுகி (குறைந்து) ஒலித்துள்ளது. எனவே, அதற்கு ஒளகாரக் குறுக்கம் என்று பெயர்.
● மகரக் குறுக்கம்
போலும் - போன்ம் மருளும் - மருண்ம் |
வரும் வளவன் |
மேற்கண்ட இரண்டு வகைகளையும் உற்று நோக்குங்கள்.
இரண்டிலும் ம் என்னும் எழுத்து இடம்பெற்றுள்ளது.
முதல் எடுத்துக்காட்டில் போலும், மருளும் என்னும் சொற்கள் மாற்றம் பெற்று போன்ம், மருண்ம் என்று திரிந்து வழங்குகின்றன.
அவ்வாறு திரிபு அடைந்த சொற்களின் இறுதியில் இடம்பெற்ற ம் என்னும் மெய்யெழுத்து தனக்குரிய மாத்திரை அளவினைவிட குறைந்து ஒலிப்பதை நீங்கள் ஒலித்துப் பார்த்து உணரலாம்.
இரண்டாம் வகையில் இடம்பெற்ற வரும் என்னும் சொல்லின் இறுதியில் அமைந்த ம் என்னும் மெய்யெழுத்து வருமொழியில் வ என்னும் எழுத்து வந்ததால் தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிப்பதை நீங்கள் ஒலித்துப் பார்த்து உணரலாம்.
இவ்வாறு இரண்டு வகைகளிலும் இடம்பெற்ற ம் (மகரம்) குறுகி ஒலிப்பதையே மகரக்குறுக்கம் என்பர்.
● ஆய்தக் குறுக்கம்
அல் + திணை = அஃறிணை |
முள் + தீது = முஃடீது |
மேற்கண்ட இரண்டு வகைகளையும் உற்று நோக்குங்கள்.
இரண்டிலும் ஃ என்னும் ஆய்த எழுத்து இடம்பெற்றுள்ளது.
நிலைமொழி, வருமொழி இரண்டும் சேர்ந்த புணர்ச்சியில் அமையும் புதிய சொல்லில் ஆய்த எழுத்து புதிதாக இடம் பெற்றுள்ளது.
அவ்வாறு புணர்ச்சியில் சொல்லின் இடையில் புதியதாகத் தோன்றும் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவினைவிடக் குறைந்து ஒலிக்கும். அதனை ஆய்தக் குறுக்கம் என்பர்.
● பதம்
இது சொல் என்பதைக் குறிக்கும் பிறிதோர் சொல்லாகும்.
ஒரு சொல்லுக்குரிய பொருளைக் காண்பதன் முன்னர் அதன் புற வடிவத்தை வைத்துச் சொல்லப்படுகின்ற சில இலக்கணங்கள் பதவியல் அல்லது சொல்லியல் எனப்பெறும்.
● வகை
பதவியல் என்னும் பிரிவினை நன்னூல் என்னும் இலக்கண நூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் அமைத்துள்ளார். அவ்விலக்கணப்படி பதம் இரு வகைபெறும்.
ஒன்று - சில கூறுகளாகப் பிரிக்கக்கூடியது.
மற்றொன்று அவ்வாறு பிரிக்கமுடியாதது.
பிரிக்கக்கூடியதைப் பகுபதம் என்பர்.
பிரிக்க முடியாததைப் பகாப்பதம் என்பர்.
கீழ்க்காணும் சொற்களை உற்று நோக்கவும்.
நிலம் | மண் | கல் | வா | போ |
இவற்றை இதற்கு மேலும் சிறியக் கூறுகளாகப் பிரிக்க முடியாது. எனவே பகாப்பதம் எனப்படுகின்றது. (பகா - பிரிக்கமுடியாத; பதம்- சொல்)
பொன்னன் | வாழ்க | செய்தான் |
இவற்றை ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு சிறு கூறுகளாகப் பிரிக்க முடியும். எனவே பகுபதம் எனப்பெறுகிறது. (பகு - பிரி(க்கக்கூடிய); பதம் - சொல்)
பொன்னன் என்பதனை | பொன் + அன் | எனப் பிரிக்கலாம். |
வாழ்க என்பதனை | வாழ் + க | எனப் பிரிக்கலாம். |
செய்தான் என்பதனை | செய் + த்+ ஆன் | எனப் பிரிக்கலாம். |
பகுபத உறுப்புகள்
சில கூறுகளாகப் பிரிக்கக் கூடிய சொற்களைப் பகுபதம் என்று கண்டோம். அவ்வாறு பிரிக்கக் கூடிய கூறுகளையே பகுபத உறுப்புகள் என்பர். அவை ஆறு வகைபெறும். அவையாவன:
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
பகுபத உறுப்புகளைப் பற்றிய விளக்கங்களை இனிக் காண்போம்.
● பகுதி | - இயல்பாக முதலில் நிற்பது. |
● விகுதி | - பகுதியை வேறுபடுத்தி இறுதியில் நிற்பது. |
● இடைநிலை | - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்பது. |
● சந்தி | - பகுதியும் இடைநிலையும் சந்திக்கும்போது தோன்றுவது. சிறுபான்மை வேறு இடங்களில் வரலாம். |
● சாரியை | - இடைநிலையையும் விகுதியையும் சார்ந்து அவற்றின் இடையில் வருவது. சிறுபான்மை வேறு இடங்களிலும் வரலாம். |
● விகாரம் | - பகுதி, சந்தி முதலியன விகாரப்பட்டு (மாறி) வருவது. |
பகுபத உறுப்புகள் சொற்களில் அமையும் நிலையை அறியக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை உற்று நோக்கவும்.
மாதிரி - 1 பகுதி + விகுதி | வாழ்க = வாழ் + க |
மாதிரி - 2 பகுதி + இடைநிலை + விகுதி | செய்தான் = செய் + த் + ஆன் |
மாதிரி - 3 பகுதி + சந்தி + இடைநிலை + விகுதி | பார்த்தான் = பார் + த் + த் + ஆன் |
மாதிரி - 4 பகுதி + சந்தி + விகாரம் + இடைநிலை + விகுதி | வாழ்ந்தான் = வாழ் + த் (ந்) + த் + ஆன் |
மாதிரி - 5 பகுதி + சந்தி + விகாரம் + இடைநிலை + சாரியை + விகுதி | நடந்தனன் - நட + த் (ந்) + த் + அன் + அன் |
இவ்வெடுத்துக்காட்டுகள் ஒவ்வொன்றிலும் பகுபத உறுப்பு இனங்களின் வளர்ச்சியை நீங்கள் உணரலாம்.
மூவகை மொழி
மொழி என்பது சொல்லைக் குறிக்கும்.
ஒரு சொல் பொருள்தரும் அமைப்பை வைத்து அதனைத் தனிமொழி, தொடர் மொழி, பொது மொழி என மூன்றாக வகைப்படுத்துவர்.
கீழ்க்காணும் மூன்று நிலை எடுத்துக்காட்டுகளையும் நோக்குக.
I | II | III |
மலர் | மலர் சூடினாள் | தாமரை தா + மரை |
முதல் நிலையில் ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்தியது. எனவே, அதனைத் தனிமொழி என்பர்.
இரண்டாம் நிலையில் இரண்டு சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நின்று ஒரு பொருளை உணர்த்தின. எனவே, அதனைத் தொடர்மொழி என்பர்.
மூன்றாம் நிலையில் ஒரே சொல் இரண்டு வகையாகவும் அமைகின்றது.
முதலில், ஒரு சொல்லாக நின்று தாமரை என்னும் மலரை உணர்த்தியது.
பின்னர் தா + மரை எனப் பிரிந்து நின்று தாவுகின்ற மான் என்னும் வேறு பொருளை உணர்த்தியது.
இவ்வாறு ஒரு சொல்லே தனி மொழியாகவும் தொடர் மொழியாகவும்
எனவே, அதனைப் பொதுமொழி என்பர்.