Primary tabs
4.5 படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று
படர்க்கையில் பலவற்றைக் குறிக்கும் வினைமுற்றுச் சொற்களில் அ, ஆ என்பன வினைமுற்று விகுதிகளாகப் பயன்படுகின்றன. இவற்றைப் பற்றிய செய்திகளை இனிக் காண்போம்.
4.5.1 தெரிநிலை வினைமுற்று
மாடுகள் மேய்ந்தன
பறவைகள் பறக்கின்றன
மரங்கள் வளர்கின்றனஇவ்வினைமுற்றுகள் பலவின்பாலுக்கு உரியன. இவற்றுள் ‘அ’ எனும் விகுதி வினைமுற்று விகுதியாக வந்துள்ளது. இவ்விகுதி,
மாடுகள் மேய்ந்த
பறவைகள் பறக்கின்றஎன்பன போலவும் முற்காலத்தில் பயன்பட்டுள்ளது. இவற்றுக்கும் மேய்ந்தன, பறக்கின்றன என்பதே பொருள்.
‘ஆ’ எனும் வினைமுற்று விகுதி எதிர்மறை வினைமுற்றுகளில் மட்டுமே வரும்.
அவை மேயா
அவை பறவா
அவை வளராஇவற்றுக்கு மேய மாட்டா, பறக்க மாட்டா, வளர மாட்டா என்பது பொருள்.
இவற்றுள் அகர விகுதி மட்டும் குறிப்பு வினைமுற்றிலும் பயன்படுகின்றது. இனி அதனைக் காண்போம்.
4.5.2 குறிப்பு வினைமுற்று
பலவின்பால் என்பது அஃறிணைப் பன்மை என்பதை அறிவீர்கள். அதற்கான வினைமுற்று விகுதியாக ‘அ’ என்பது தெரிநிலை வினையில் வருவதை மேலே பார்த்தோம். குறிப்பு வினைமுற்றிலும் ‘அ’ என்பது வினைமுற்று விகுதியாக வருவதை எடுத்துக்காட்டுகள் வழி இனிக் காண்போம்.
கரிய, பெரிய, நல்ல என்பன போன்ற சொற்களை குறிப்பு வினைமுற்றுகளாகப் பயன்படுத்தலாம்.
மலைகள் பெரிய (பெரியனவாக உள்ளன)
யானைகள் கரிய (கரியனவாக உள்ளன)
அவை நல்ல (நல்லவையாக உள்ளன)எனும் பொருள்பட வரும். இவ்வாறு வருவனவற்றைப் பேசுவோர் கேட்போர் கருத்திற்கேற்ப,
நேற்று இம்மலைகள் பெரிய
இன்று இம்மலைகள் பெரிய
நாளை இம்மலைகள் பெரியஎனக் குறிப்பாகக் காலம் காட்டுமாறு பயன்படுத்தலாம். இவ்வாறு ‘அ’கரம் குறிப்பு வினைமுற்று விகுதியாகப் பயன்படுவதை நினைவிற் கொள்க.