Primary tabs
4.2 உயிர்ப்பொருள், உயிர் அல்லாத பொருள்
உரிச்சொல்லின் பொது இலக்கணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இனி உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் விளக்கங்களைக் காண்போம்.
ஓரறிவு உயிர் முதலாக ஐந்து அறிவு உயிர் ஈறாக உள்ள அனைத்தும் உயிர் உடைய பொருள்கள் ஆகும். இலக்கண நூலார் உயிர்களை ‘அறிதல் உணர்வு’ அடிப்படையில் பகுத்துள்ளனர். மெய்யால் அதாவது உடம்பால் உற்று உணரும் உணர்ச்சி மட்டுமே கொண்ட உயிரினங்கள் ஓரறிவு உடையவாகும். மெய்யோடு நாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய ஐம்பொறிகளாலும் அறியும் ஆற்றலுடைய மனித உயிர்களை ஐந்து அறிவு உடையவாகும் என்கிறார் நன்னூலார். தொல்காப்பியர் மனம் என்பதையும் ஓர் அறிவாகக் கொண்டு அதனை ஆறாவது அறிவு என்று கூறுகின்றார்.
உயிர் இல்லாத உடம்பு முதலான உலகத்துப் பொருள்கள் எல்லாம் உயிர் அற்ற பொருள்களாகும்.
இதுவரை உயிர் உடைய மற்றும் உயிர் அற்ற பொருள்களின் பகுப்பு முறையை அறிந்து கொண்டீர்கள். இனி அவ்விரு பொருள்களின் வகைகளை விரிவாகக் காண்போம்.