Primary tabs
-
4.3 உயிர் உடைய பொருள் வகைகள்
உயிர் உடைய பொருள்களை ஐந்து வகைகளாகப் பிரித்துள்ளார்கள் என்பதை முன்னரே கண்டோம். இப்பகுதியில் ஐந்து வகை உயிர்களையும் விளக்கமாகப் பார்ப்போம்.
• ஓர் அறிவு உயிர்
மெய் அதாவது உடம்பால் தொடுதல் உணர்வை மட்டுமே உடைய உயிர்கள் ஓர் அறிவு உயிர்கள்.
எடுத்துக்காட்டு: செடி, கொடி, புல், மரம்
• ஈரறிவுயிர் (இரண்டு அறிவு உயிர்)
மெய் உணர்வோடு, சுவை அறியும் நாக்கு உடையவை இரண்டு அறிவு உடைய உயிர்களாகும்.
எடுத்துக்காட்டு: சிப்பி, சங்கு
• மூவறிவுயிர் (மூன்று அறிவு உயிர்)
மெய், நாக்கு ஆகியவற்றோடு நாற்றத்தை (வாசனை) அறியும் மூக்கு உடையவை மூன்று அறிவு பெற்ற உயிர்கள்.
எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு
• நாலறிவுயிர் (நான்கு அறிவு உயிர்)
மெய், நாக்கு, மூக்கு ஆகியவற்றோடு காணும் ஆற்றல் பெற்ற கண் உடைய உயிர்கள் நான்கு அறிவு பெற்றவை.
எடுத்துக்காட்டு: தும்பி, வண்டு
• ஐயறிவுயிர் (ஐந்து அறிவு உயிர்)
மெய், நாக்கு, மூக்கு, கண் ஆகியவற்றோடு கேட்கும் திறனுடைய செவி உடைய உயிர்கள் ஐந்தறிவு பெற்றவையாகும்.
எடுத்துக்காட்டு: விலங்குகள், பறவைகள், மனிதர்
இவ்வாறு ஐந்து வகைகளாக உயிர்ப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.