தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பதம் என்பதன் பொருள் வரையறை

  • 4.1 பதம் என்பதன் பொருள் வரையறை

    ஓர் எழுத்துத் தனியே வந்து பொருளைத் தந்தால், அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருளைத் தந்தால் அது பதம் எனப்படும். பதம் என்பது ‘சொல்’ (word) என்று பொருள்படும். சொல் என்பதை உணர்த்த ‘மொழி’ என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். எனவே பதம், சொல், மொழி ஆகிய மூன்று சொற்களும், பொருள் தரக்கூடிய தனி எழுத்தை அல்லது எழுத்துகளின் கூட்டத்தைக் குறிப்பன எனக் கொள்ளலாம். இதனை நன்னூல்,

    எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்

    (நூற்பா - 127)

    என்ற நூற்பாவில் விளக்குகிறது.

    இந்த நூற்பாவில் பின்வரும் செய்திகள் வெளிப்படையாகப் புலப்படுகின்றன; அவை,

    (1)
    எழுத்துத் தனித்தும் வரலாம்.
    (2)
    ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வரலாம்.
    (3)

    ஆனால் அது பொருள் தருதல் வேண்டும் என்பதே இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

    இந்த நூற்பா உட்கருத்தாக மற்றொரு பொருளையும் தெரிவிக்கிறது. எழுத்துத் தனித்து வந்தாலும், எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள் தரவில்லை என்றால் அது பதமாகாது; சொல்லெனக் கருதப்படமாட்டாது என்பதே அந்தக் கருத்தாகும்.

    எனவே, இந்த நூற்பாவில் உயிர்ப்பாக இருப்பது ‘பொருள் தருதல்’ என்னும் தொடராகும்.

    முதலில் தனித்துவரும் எழுத்துப் பதமாவதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    ஆ, ஈ - இவ்விரண்டு எழுத்துகளும் தனித்தனியே வந்து பொருள் தருகின்றன. ‘ஆ’ என்பது பசு என்னும் பொருளையும், ஈ என்பது பெயர்ச்சொல்லாக இருந்தால் பூச்சியாகிய ஈ என்னும் பொருளையும், வினைச்சொல்லாக இருந்தால் ‘தா’ என்னும் பொருளையும் உணர்த்துகின்றன. எனவே ஆ, என்பது ஒரு பதமாகிறது. ஈ என்பது மற்றொரு பதமாகிறது.

    தனித்து வரும் எழுத்துப் பதமாகாமல் இருப்பதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    ச, க என வரும் குற்றெழுத்துகள் தனியே வருகின்றபோது அவை எந்தப் பொருளையும் உணர்த்துவதில்லை. எனவே பதமாகவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    இரண்டாவதாக, எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்ற போது பதமாகின்றதற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    தலை, தலைவி, தலைவன் என வரும் சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    தலை
    -
    இரண்டெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது.
    தலைவி
    -
    மூன்றெழுத்துகள் வந்து பொருள் தந்துள்ளது.
    தலைவன்
    -
    நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றது.

    எழுத்துகள் தொடர்ந்து வந்தாலும் பொருள்தராமல் இருப்பின் பதம் ஆகாததற்கு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    கப, கபம, கிகருந என வருவனவற்றில் எழுத்துகள் தொடர்ந்து வந்துள்ளன. ஆனால் இவை பொருள் தரவில்லை என்பதால் பதமாக ஆவதில்லை. இதனை நன்கு மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

    4.1.1 ஓரெழுத்து ஒருமொழியும், தொடர்எழுத்து ஒரு மொழியும்

    எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருவதும், தொடர்ந்து வந்து பொருள் தருவதும் பதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஓர்எழுத்து மட்டும் தனித்து நின்று பொருள் தருமானால் அது ஓர்எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது. பல எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர் எழுத்து ஒருமொழி என்று அழைக்கப்படுகின்றது.

    இந்த இருவகைச் சொற்கள் (மொழி) குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 12:07:39(இந்திய நேரம்)