Primary tabs
-
4.2 தொல்காப்பியர் கருத்து
தொல்காப்பியர் எழுத்துகளை விளக்கி விட்டுச் சொல் தோன்றும் முறையை எடுத்துக்காட்டுகிறார். தொல்காப்பியர், சொல் மூன்று முறைகளில் தோன்றும் என்று வகுத்துரைக்கிறார். அவை,
(1)ஓர்எழுத்து ஒருமொழி(2)ஈர்எழுத்து ஒருமொழி(3)பலஎழுத்து ஒருமொழி.ஆகியன. இக்கருத்தை,
ஓர்எழுத்து ஒருமொழி ஈர்எழுத்து ஒருமொழி இரண்டுஇறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே (எழுத்து. 2 : 45)என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது. எனவே மேலே கண்ட மூவகை நிலைகளையும் இனித் தனித்தனியே காண்போம்.
தமிழில் உள்ள உயிர்எழுத்துகள் பன்னிரண்டில் நெடில்எழுத்துகளாக இருக்கும் ஏழு எழுத்துகளும் ஓர்எழுத்து ஒருமொழிகள் என்பதை,
நெட்டெழுத்து ஏழே ஓர்எழுத்து ஒருமொழி
(எழுத்து. 2: 43)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது.
இந்நூற்பா, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனவரும் ஏழு நெடில் எழுத்துகளும் பொருள் தருவன. எனவே இவை ஓர்எழுத்து ஒருமொழிகள் என்று விளக்குகின்றது. இந்த நெடில்எழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் என்ன பொருள் என்பதைக் காண்போம்.
வ.எண்எழுத்துபொருள்(1)ஆபசு(2)ஈஈ(3)ஊஇறைச்சி(4)ஏஅம்பு(5)ஐஅழகு, தலைவன்(6)ஓமதகுநீர் தாங்கும் பலகை(7)ஒளஇந்த எழுத்திற்குப் பொருள் இல்லைமேலே கண்டவற்றுள் ‘ஒள’ என்னும் எழுத்து ஓர்எழுத்து ஒருமொழி ஆவதில்லை. எனவே இந்நூற்பாவிற்கு உரை கூறும் அறிஞர்கள், இந்த நூற்பா உயிர்எழுத்துகளுக்கும் உயிர்மெய்எழுத்துகளுக்கும் பொது என்பதால் ‘ஒள’ என்பதை உயிர்மெய்யில் வரும் ‘கௌ, வௌ’ முதலியவற்றை உணர்த்துவதாகக் கருதவேண்டும் என்று தெரிவிக்கின்றனர். எனவே உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறு மட்டுமே ஓர்எழுத்து ஒருமொழி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகளைப் பற்றிக் கூறிய தொல்காப்பியம், குற்றெழுத்துகள் ஐந்தும் ஒர்எழுத்து ஒருமொழியாக வருதல் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே
(எழுத்து. 2 : 44)
என்பது தொல்காப்பிய நூற்பா.
இந்த நூற்பாவைக் காணும்போது அ, இ, உ, எ, ஒ என வரும் குற்றெழுத்துகளில் அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டுப் பொருளை உணர்த்துவன என்பது நினைவுக்கு வரும். எ என்னும் எழுத்து வினாப்பொருளை உணர்த்தும் என்பதும் நினைவுக்கு வரும். ஆனால் இவற்றை ஏன் ஓர்எழுத்து ஒருமொழி என்று குறிப்பிடவில்லை என்ற வினா நமக்கு எழக்கூடும். அ, இ, உ இம் மூன்றும் சுட்டெழுத்துகள் ; எ என்பது வினா எழுத்து. சுட்டெழுத்துகளும் வினா எழுத்தும் ‘இடைச் சொற்கள்’ என்னும் பிரிவில் அடங்குவன. இடைச்சொல் என்பது தனியே வந்து பொருள் தரக்கூடியது அல்ல. அது பிற சொற்களோடு (பெயர், வினை) சேர்ந்து வந்தே பொருள் தரும். எனவே தனியே நின்று பொருள் தராத காரணத்தால் சுட்டெழுத்துகளான அ, இ, உ ஆகியவையும் ‘எ’ என்னும் வினா எழுத்தும் ஓர்எழுத்து ஒருமொழி என்னும் இலக்கண வரம்பிற்குள் வரவில்லை என்பது தெளிவாகிறது.
தொல்காப்பியர் சொல் தோன்றும் முறையில் அடுத்ததாகக் கூறுவது ஈரெழுத்து ஒருமொழி ஆகும்.
இரண்டு எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருமானால், அது ஈர்எழுத்து ஒருமொழி எனப்படும்.
அணி, மணி, கல், நெல் எனவரும் சொற்களில் இரண்டு எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதைக் காணலாம். இவை ஈர்எழுத்து ஒருமொழிக்கு எடுத்துக்காட்டுகள்.
பல எழுத்துகள் சேர்ந்து வந்து பொருள் தருவதைத் தொடர்எழுத்து ஒருமொழி என்று அழைப்பர். இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமானால் அது தொடர்எழுத்து ஒருமொழி ஆகும் என்கிறார், தொல்காப்பியர்.
கல்வி, கொற்றன், பாண்டியன் என வரும் சொற்களைப் பாருங்கள்.
(1)கல்வி-என்பதில் மூன்று எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.
(2)கொற்றன்-இதில் நான்கு எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.
(3)பாண்டியன்-இதில் ஐந்து எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருகின்றன.
ஆக, தொல்காப்பியம், ஒன்று, இரண்டு, பல என்னும் அடிப்படையில் எழுத்துகள் இணைந்து வந்து பொருள் தருவதை விளக்குகிறது.