தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

New Page 1-6.4 பிற வருணனைகள்

  • 6.4 பிற வருணனைகள்

    மேற்குறிப்பிட்டவை தவிர, அரண்மனையைப் பற்றியும், தேரைப் பற்றியும், யாழைப் பற்றியும் வருணனைகள் உள்ளன.

    6.4.1 அரண்மனை வருணனை

    வள்ளல் நல்லியக்கோடனின் அரண்மனை மேரு மலையைப் பெயர்த்து வைத்தது போன்ற தோற்றம் உடையது. அதன் வாயில் அம்மலை கண் திறந்தது போன்று காட்சி தருகிறது. அவ்வாயில் எப்பொழுதும் மூடப்படாத நெடுவாயிலாக விளங்குகிறது. அடையா நெடுங்கதவைக் கொண்ட இந்த அரண்மனைக்கு, பொருநர் முதலான பலவகை மக்களும் புலவர், சான்றோரும் தடங்கல் இன்றிச் சென்று வந்தனர்.

    6.4.2 தேர் வருணனை

    நல்லியக்கோடன் இரவலர்க்கு இன்முகத்துடன் வழங்கும் பரிசுப் பொருள்களுள் தேரும் ஒன்று. இத்தேர் கைதேர்ந்த தொழில் திறன் மிக்க தச்சர்களால் உருவாக்கப்பட்டது. இத்தச்சர்கள் சிற்றுளி கொண்டு தேரின் ஒவ்வோர் உறுப்பாகப் பலகாலும் செதுக்கிச் செதுக்கி அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் அமைத்திருந்தனர்.

    இத்தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால்கள் குறட்டுடன் (குடம்) நன்கு பொருத்தப்பட்ட அழகிய தோற்றத்தை உடையன. இத்தேர்த் தட்டின் உட்புறப் பலகைகள் முருக்க மரப் பூ நிறத்தை ஒத்த அரக்கால் செந்நிறம் ஊட்டப் பெற்றன. இத்தகைய அழகிய தேர்களை வெள்ளோட்டமாக ஓட்டிப் பார்த்து மனநிறைவு பெற்ற பின்னரே அரசன் பரிசிலர்களுக்கு வழங்கினான்.

    6.4.3 யாழ் வருணனை

    பல்வகை இசைக் கருவிகளுள் யாழ் என்பதும் ஒன்றாகும். பத்தர், தண்டு, திவவு, பச்சை, நரம்பு என்பன இதன் முக்கியமான உறுப்புகள் ஆகும்.

    பத்தர்

    பெரிய வயிற்றை ஒத்த வெற்று அறையுடன் கூடிய யாழின் அடிப் பகுதியைப் பத்தர் என்பர்.

    தண்டு

    பத்தருடன் படம் எடுத்த பாம்பின் தோற்றத்துடன் பொருத்தப் பட்டிருக்கும் மரத்தண்டு.

    திவவு

    மேல்நோக்கிப் பத்தருடன் நிறுத்தப்பட்ட தண்டின் முனைப் பகுதியையும் கடைப் பகுதியையும் நரம்புகள் பலவற்றால் இணைத்திருப்பர். அவ்வாறு இணைக்கப்பட்ட நரம்புகளை, ஒரு பக்கம் இழுத்து வைத்து இறுக்கிச் சுற்றவும் தளர்ந்து போகுமாறு விடவும் தண்டின் முனைப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மரத் திருகுக் கருவியைத் திவவு என்பர்.

    பச்சை

    பருத்த வயிறாக வெற்று அறையுடன் கூடிய பத்தரைப் பசிய விலங்கின் தோல் கொண்டு போர்த்திய நிலையில், காற்றின் அதிர்வினால் நரம்பின் வழியாக இன்னிசை பிறக்கும். இங்ஙனம் போர்த்தப்பட்ட தோலில் சுருக்கம் ஏற்படாதவாறு பத்தரின் விளிம்பு முழுவதுமாக நுண்ணிய வார் கொண்டு தைத்திருப்பர். அவ்வாறு தைக்கப்பட்டுப் பத்தரின் மேல் போர்த்தப்பட்ட விலங்கின் தோலையே பச்சை என்பர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:35:58(இந்திய நேரம்)