தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02123-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6.

    உணர்த்த உணரும் ஊடற்குரிய கிளவிகளை எழுதுக.

    பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில்கள் மூலமாகத் தலைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வான். அப்போது வாயில் என்ற நிலையில் செயலாற்றும் பலர் தலைவியின் ஊடலை (பிணக்கை)த் தீர்ப்பதற்காக முயற்சி மேற்கொள்வர். பல உண்மைகளை உணர்த்துவர். அவ்வாறு உணர்த்த உணரும் ஊடலுக்கான கிளவிகள் பல உள்ளன. அவையாவன :

    (1) ‘தலைவன் பிரிந்து சென்றதற்குக் காரணம் இது’ என்று கண்டோர் கூறுதல்.

    (2) தலைவன் பிரிந்த பிறகு தனித்திருந்த தலைவி, துன்ப மிகுதியால் அழுது வருந்துதல்.

    (3) தலைவியைச் சந்தித்த தோழி ‘நீ அழுது கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன?’ என்று வினவுதல்.

    (4) தலைவன் தன்னைப் பிரிந்து பரத்தையிடத்தில் சென்று தங்கினான் என்று தலைவி தோழியிடம் கூறுதல்.

    (5) இவ்வாறு கூறுதல் முறையன்று என்று தோழி தலைவியிடம் கூறுதல்.

    (6) தலைவி, தோழியைச் செவ்வணி (சிவந்த ஆடை முதலியன) அலங்காரம் செய்து தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பியதைக் கண்டு அயல் மனையார் மனமிரங்கிப் பேசுதல்.

    (7) செவ்வணி அலங்காரத்தோடு பரத்தையர் சேரிக்குச் சென்ற தோழியைப் பார்த்த பரத்தையர் அவளைப் பழித்துக்கூறுதல்.

    (8) பரத்தையர் சேரியில் இருந்து தலைவன் திரும்பி வருவதைக் கண்ட ஆயத்தார் அச்செய்தியைத் தோழியிடம் கூறுதல்.

    (9) அதைக்கேட்ட தோழி தலைவன் மீண்டு வரும் அச்செய்தியைத் தலைவியிடம் சென்று சொல்லுதல்.

    (10) தலைவி, தலைவனை எதிர் சென்று வரவேற்றுப் பணிதல்.

    (11) தலைவனும் தலைவியும் இல்லற இன்பத்தில் மகிழ்ந்திருத்தல். மேற்காணும் கிளவிகள் பதினொன்றும் உணர்த்த உணரும் ஊடலுக்குரியவை.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:58:07(இந்திய நேரம்)