தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க கால வீட்டமைப்பு

  • 1.4 சங்க கால வீட்டமைப்பு

        சங்க காலத்தில் தனிப்பட்டோர் வீடு கட்டும் பொழுது கட்டட விதிமுறைகளையெல்லாம் பின்பற்றிச் செயற்பட்டார்களா என்று ஐயுறலாம். ஆனால், பண்டைக் காலத்திலிருந்தே மயமதம் எனும் சிற்ப நூல் வழக்கிலிருந்துள்ளது. தென்னாட்டில் மயன் கொள்கையும் வடநாட்டில் விசுவகர்மாவின் கொள்கையும் வழக்கிலிருந்து வந்துள்ளமைக்குக் குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதையில்,

    நுண்வினைக் கம்மியர் காணா மரபின்
    துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு
    மயன் விதித்துக் கொடுத்த மரபின இவை தாம் (106-108)

    எனவரும் அடிகளை ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இனி, வீடுகட்டும் பொழுது பின்பற்றக் கூடிய சில விதிமுறைகளைக் காண்போம்.

        சிறு வீடாயினும் பெரிய மாளிகையாயினும் கட்டடக் கலை அடிப்படையில் வீடு கட்டும் மனையிடத்தை வரையறை செய்து கொள்ள வேண்டும். அடுத்து, வீடு பறித்தல் (அடிப்படை - அத்திவாரம் - அமைக்கப் பள்ளம் தோண்டுதல்), கல்லும் சுண்ணாம்பும் கலந்து அழுத்தமாக அடிப்படை போடுதல், சுவர் அமைத்தல், முதல் வாயில் (முகப்பு நிலை) வைத்தல், காலதர் (ஜன்னல்) அமைத்தல், விட்டம் அமைத்தல், மேற்கூரையைத் தேர்ந்து அமைத்தல், தளவரிசை அமைத்தல், சுவர்களுக்குச் சுண்ணாம்புக் கலவை பூசுதல், வெள்ளையடித்தல், தச்சுக் கழித்தல் (கண்ணேறு படாதிருக்க ஆவன செய்தல்), புதுமனை புகுதல் முதலிய பலவும் கட்டடக் கலையுடன் தொடர்பு கொண்டவையாகும். இவற்றையெல்லாம் முன்னோர்கள் அனுபவ மரபுச் செல்வமாக (Heritage by experience) ஏற்றுச் செயற்படுத்தி வந்துள்ளனர்.

        மண் சுவர்க் குடிசையில் வாழ்ந்தவன் நாகரிகப்படி நிலையில் செங்கற்களை அடுக்கிச் சுவரமைத்து வீடு கட்டியுள்ளான் என்பது,

    சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்

            (பெரும்பாணாற்றுப்படை. 405)

    (சுடுமண் = சுட்டமண், செங்கல்)

    இட்டிகை நெடுஞ்சுவர்

         (அகநானூறு. 167 : 13)

    (இட்டிகை = செங்கல்)

    எனவரும் செய்யுட் பகுதியாலும், தூண் வைத்துக் கட்டும் இல்லம் இருந்தமை பற்றிச்,

    சிற்றில் நற்றூண் பற்றி      (புறநானூறு. 86 : 1)
    கவை துற்ற நாற்காற் பந்தர்ச் சிறும னை வாழ்க்கை
            (புறநானூறு. 29 : 19-20)

    (கவைதுற்ற = பிரிவு தோன்ற)

    எனவரும் செய்யுட் பகுதியாலும், புல்லாலும் வரகு வைக்கோலாலும் தென்னங் கீற்றாலும் வீட்டின் கூரை வேய்ந்த பாங்கினைப்,

    புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து
             (புறநானூறு. 120 : 13)
    படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை
             (அகநானூறு. 87 : 3)

    (குரம்பை = சிறுகுடில்)

    பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
    கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
         (பெரும்பாணாற்றுப்படை. 152 : 153)
    பா
    =
    பரவிய;
    பெரிய ; கருவை
    =
    வரகு வைக்கோல் ;
    சீறூர்
    =
    சிறிய ஊர்;

    எனவரும் செய்யுட்பகுதியாலும் அறிந்து கொள்ளலாம். மிகப் பண்டைய காலத்திலேயே ஓவியம் போன்ற மனைகள் கட்டடக் கலை நேர்த்தியுடன் கட்டப்பட்டிருந்தன. இதனை

    ஓவத்தன்ன இடனுடை வரைப்பின்         (நற்றிணை. 182 : 2)
    ஓவத்தன்ன வினைபுனை நல்இல்         (அகநானூறு. 98 : 11)

    (ஓவம் = ஓவியம்)

    எனவரும் செய்யுட் பகுதிகளால் தெரிந்து கொள்ளலாம். பெருமனைகள் கட்டிய காலத்தில், மக்கள் தம் வளத்துக்கும் வசதிக்கும் ஏற்ப வீட்டின் பல பக்கங்களிலும் படிகளுடன் கூடிய திண்ணைகளைக் கட்டி வாழ்ந்துள்ளனர்.

        மாடம், மண்டபம் முதலிய உயர்தரமான கட்டடங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. மாடத்துக்குச் சித்திரம் எழிலூட்டும் என்பதைப் பிற்காலத்துப் பவணந்தி முனிவர் தம் நன்னூலில், மாடக்குச் சித்திரம் (55) எனக் கூறிக் காட்டியதை நினைவில் கொள்ளலாம்.

        அழகிய அரண்மனை மாடத்தில் தீட்டப்பெற்ற வேங்கைப் புலியின் ஓவியத்தைக் கண்டதும் கரிய பெண்யானை நடுக்க முறுகிறதாம்! இளநங்கையரும் கண்டு அச்சமுற்று நடுங்குகின்றனராம்! இதனைப் பரிபாடலில்,

    எழில் மாடத்துக்
    கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று மைபுரை
    மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புற
                 (10 : 45-47)
    கைபுனை
    =
    கையால் எழுதப்பெற்ற ;
    வெருவு
    =
    அச்சம் ;
    விதிர்ப்பு
    =
    நடுக்கம்

    எனவரும் பாடற் பகுதியால் அறியலாம்,

        அரசர்க்கே தனிப்பட்ட முறையில் சொந்தமான சித்திரமாடங்களும் அக்காலத்தில் கட்டப்பட்டிருந்தன. அவற்றைப் பொது மக்களும் உத்திரவு பெற்ற ஓவியங்களைக் கண்டுகளிக்கக் கூடிய முறையில் வசதி இருந்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2018 15:17:49(இந்திய நேரம்)