Primary tabs
-
1.6 தொகுப்புரை
இலக்கியம் தன்னகத்தே பல பண்புகளையும், பல கருத்துகளையும் கொண்டிருக்கிறது. அவற்றை ஆராயவும் விளக்கவும் திறனாய்வு வகைகள் தேவைப்படுகின்றன. திறனாய்வு வகைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாராட்டு முறைத் திறனாய்வு இலக்கியத்தின் நிறை, குறைகளைச் சமமாக அறிந்து மதிப்பீடு செய்யாமல், நிறைகளை மட்டும் எடுத்துக் கூறி அவற்றைப் போற்றும் தன்மையைக் கொண்டது ஆகும். ஒரு திறனாய்வாளன் தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட சில விதிமுறைகளையும், கருதுகோள்களையும் அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட்ட இலக்கியம் பற்றிய முடிபுகளை அல்லது தீர்வுகளைச் சொல்லுவதுண்டு. இதனை முடிபுநிலைத் திறனாய்வு என்கிறோம்.
விதிமுறைத் திறனாய்வு ஒரு நிலையில் முடிபுமுறைத் திறனாய்வு போன்று இருந்தாலும், இத்திறனாய்வு இலக்கியத்தின் வரையறைகளை முன்கூட்டி இன்னவை என எடுத்துக் கொண்டு, இலக்கணம் கண்டதற்கு இலக்கியம் என்று பேசுகிறது. செலுத்துநிலைத் திறனாய்வு என்பது விதிமுறையில் நின்று இலக்கியத்தைப் பார்ப்பதில் ஏற்படும் குறைபாடுகளை மனத்திற் கொண்டு அவற்றைத் தவிர்க்கும் நோக்கில் அமைவது. ஒவ்வோர் இலக்கியத்திற்கும் தனித்தனியாக அமைப்பு விதிகள் உண்டு என்பது போன்ற நோக்கத்தில் அமைவது இத்திறனாய்வு வகை.
-