Primary tabs
-
5.0 பாட முன்னுரை
தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் விந்தன். இவர் மற்ற எழுத்தாளர்களில் இருந்து மாறுபட்டவர்; பாதிப்புகளைக் கண்டு அஞ்சாத படைப்பாளி; எதிலும் எவரிடத்திலும் சமரசம் செய்து கொள்ளாத சுயமரியாதைக்காரர்; சுதந்திரச் சிந்தனையாளர்; ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள் இவர்களின் சுகதுக்கங்களைத் தம் கதைப் பொருளாக்கியவர்; சமூக அநீதிகளைத் தம் கதைகளின் மூலம் எடுத்துக்காட்டியவர்.
இவரது கதைகள் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது பாலும் பாவையும் என்ற நாவல் அனைவராலும் போற்றப்பட்ட படைப்பாகும். அந்நாவல், மு. பரமசிவம் என்பவரால் நாடகமாக்கப்பட்டு இராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்நாடகம் வானொலி நாடகமாகத் தமிழில் மட்டுமன்றி அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. பல கதைகள் இரஷ்ய மொழியிலும், செக் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.