Primary tabs
-
1.4 பிற்கால உரைநடை
உரையாசிரியர்களின் உரைப்பணியின் தொடர்ச்சியை நாயக்கர் காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் காணமுடிகிறது. ஐரோப்பியர் தொடங்கி வைத்த நடை தமிழிற்குப் புதிதானது. வைத்தியநாத தேசிகர், சுப்பிரமணிய தேசிகர், தத்துவபோதக சுவாமிகள், வீரமா முனிவர் முதலானோர் உரைநடை வளர்ச்சிக்கு உழைத்தனர்.
நாயக்கர் காலத்தில் உரைகள் மூலம் உரைநடை வளர்ந்தது. நிரம்ப வழகிய தேசிகர் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகிய திருவருட்பயனுக்கு அழகிய எளிய நடையில் உரை வகுத்தார். மயிலேறும் பெருமாள் கல்லாடத்திற்கு உரை வகுத்தார். இலக்கணவிளக்க ஆசிரியர் வைத்தியநாததேசிகர், இலக்கணக் கொத்து சாமிநாததேசிகர், பிரயோக விவேகம் சுப்பிரமணிய தேசிகர் ஆகிய மூவர் நடையும் பண்டைய இலக்கிய நடையினை ஒட்டியன. சிவப்பிரகாசர் தருக்க பரிபாஷை எனும் உரைநடை நூல் யாத்துள்ளார்.
ஐரோப்பியர் காலத்தில் இயற்கையான ஒரு மொழி நடையாக உரைநடை உருவானது. இதற்கு அடிகோலியவர்கள் ஐரோப்பியராவர். அக்காலகட்டத்தில் ஐரோப்பியர் வளர்த்த உரைநடையில் அனைவர்க்கும் புரிந்த இயற்கை நடையும் இருந்தது. உரையாசிரியர் தொடங்கி வைத்த கற்றோர்க்கே புரியும் செயற்கை நடையும் இருந்தது. பேச்சுத் தமிழ் கொண்டே, தமிழுக்கு ஒருவிதப் புதிய நடையினைப் படைத்தவர் ஐரோப்பிய அறிஞர்களே! இவர்களது எழுதுபொருள், அச்சுப் பொறிகளின் வரவால் உரைநடை விரைந்து பரவி வளர்ந்தது.
இந்திய மொழிகளிலேயே உரைநடை நூல் முதன் முதல் தோன்றியது தமிழ்மொழியில்தான். அம்பலக்காட்டில் 1577-இல் வெளியான கிருஸ்துவோபதேசம் என்ற நூலே தமிழில் அச்சான முதல் நூல் என்கிறார் கால்டுவெல். இப்போது அந்நூல் கிடைக்கவில்லை. பதினாறு பக்கங்கள் கொண்டதும் 1579-இல்கொல்லத்தில் ஆன்றிக் என்பவர் அச்சேற்றியதும் ஆன தம்பிரான் வணக்கம் (கிறிஸ்தவ வணக்கம்) தான் முதன்முதலில் தோன்றியது என்கிறார், தனிநாயக அடிகள். 1716-இல் சீகன்பால்கு ஐயர் ‘தமிழ் - லத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு நூலினைத் தாமே உண்டாக்கிய தமிழ் அச்சுக்களால் பதிப்பித்தார். பல சொற்கள் இரு மொழியிலும் ஒன்றாக இருப்பதை உணர்த்தியுள்ளார். இலக்கண நடையை விட்டு நீண்ட தொடர்களில் பேச்சு நடையினைப் பின்பற்றி எழுதினார். 17ஆம் நூற்றாண்டில் தத்துவபோதகர் என்பவர் கிறித்தவர் படித்தற்கெனப் பல நூல்களைப் படைத்தார். இதே காலத்தில் அருளானந்த அடிகள் சில உரைநடை நூல்கள் செய்தார்.
பதினெட்டாம் நூற்றாண்டு
பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் வசன நடை வளர்த்த வல்லாளர். இவர் எழுதிய தொன்னூல் விளக்கம் கற்றோர்க்கே உரிய நடை கொண்டது. பேச்சுத் தமிழை அடியொற்றி எளிய நடையில் வேதியர் ஒழுக்கம் என்னும் நூலை வரைந்தார். இது கல்லார்க்கெல்லாம் களிப்பருளுவது. இவர் சமயக் கொள்கைகளைப் பரப்புதற்குத் தமக்கெனத் தனியொரு நடையினை வகுத்துக் கொண்டார். அது ஒரு புதுநடை. பரமார்த்த குரு கதையிலும் அமைவது அனைவர்க்கும் ஏற்றது. உரைநடையாக உலவிய தமிழ் உரைநடை இலக்கியமாகவும் உருவெடுக்கத் தொடங்கியது. எழுத்துகளில் சீர்திருத்தங்களையும் செய்தார் அவர். வீரமாமுனிவர் தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் உரைநடையின் தோற்றுநர் என்று போற்றப்படுகிறார். சீகன் பால்கு தரங்கம்பாடியில் மத போதகராகப் பல்லாண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் பல உரைநடை நூல்களை இயற்றியுள்ளார். திருக்குறளுக்கு உரையும் மொழிபெயர்ப்பும் எழுதியுள்ளார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு
அச்சு இயந்திரங்களின் உதவியால் பல உரைநடை நூல்கள் வெளிவர ஆரம்பித்தன. இக்கால கட்டத்தில் பல நூல்களை அச்சிட்ட பெருமை காலின் மெக்கன்சி, ஜான் மெர்டாக் என்பவர்களைச் சாரும். இவர்கள் இருவரும் புராணம், வாழ்க்கை வரலாறு, நாடகம், தத்துவம், வானநூல், மருத்துவம், சமயம், சட்டம், அறிவியல், மொழியியல், இதழியல் போன்ற பல துறை நூல்களைத் தொகுத்து முன்னுரையோடு அச்சிட்டு வெளியிட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உரைநடை ஓங்கி வளர்ந்தது. விரைந்து சிறந்தது. இதற்குரிய காரணங்கள்:
1) நாடெங்கும் அச்சகங்கள் தோன்றின.
2) கிறித்தவ மதம் பரப்ப எண்ணற்ற நூல்களை மிஷனரிகள் வெளியிட்டன.
3) இதுகண்டு விழிப்புற்ற இந்துக்கள் தங்கள் இதிகாச புராணங்களை
வசனங்களாக வடிக்கத் தொடங்கினர்.4) இந்த நூற்றாண்டில்தான் பத்திரிகைகள் பிறந்தன.
5) சென்னைக் கல்விச் சங்கம் தோன்றிப் பாட நூல்களையும்,
மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டது.6) கிறித்துவ மதத்தை எதிர்த்துக் கண்டன நூல்கள் எழுந்தன.
உரைநடையாசிரியர் சிலர்
தஞ்சைவாணன் கோவைக்கு உரை வகுத்த சொக்கப்ப நாவலர் நடை, தெளிவும் தனித்துவமும் வாய்ந்தது. இந்த நூற்றாண்டில் உரைநடை இளவரசு தாண்டவராய முதலியார் வெளியிட்ட பஞ்சதந்திரக் கதை (1826) தலையாயது; நகைச்சுவை மிக்கது. நீதிகள் நிறைந்த தெள்ளிய நடையது. இந்நூற்றாண்டின் உரைநடை வேந்தராக ஒளிர்பவர் ஆறுமுகநாவலர். உரைநடைக்கு ஒரு வடிவினை அருளியவர். இலக்கண வழுவில்லாத ஓர் எளிய இனிய தெள்ளிய நடையைத் தந்து வழிகாட்டினார். வழக்கில் பயின்ற சொற்களைக் கொண்டே சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிவான தமிழில், இலகுவான நடையில் எழுதினார். குறியீட்டு முறைகளைப் பயன்படுத்தி மக்கள் உள்ளத்தில் ஊடுருவும் ஆற்றல் சான்ற அருமையான தமிழில் எழுதியும் பேசியும் நாவலர் நடை என ஒரு தனி நடையையே உண்டாக்கினார். இதனால் இவர் தமிழ்க் காவலர் எனவும், தற்காலத் தமிழ் உரையின் தந்தை என்றும் ஏத்தப் பெற்றார்.
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே
எனத் தாமோதரம் பிள்ளை ஏத்துகிறார்.
வசன நடை கைவந்த வல்லாளர்
என்பார் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர்).
இதே சமயத்தில் நீண்ட வாக்கியங்கள் கொண்டு நீட்டி எழுதும் நடையும் நிலவியது. இராமலிங்க அடிகளின் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், உண்மை நெறி போன்றன மிக நீண்ட வாக்கியங்களில் கற்றோர்க்கே புரியும் சொற்களைக் கொண்டு இலக்கண வரம்புடன் யாக்கப்பட்டுள்ளன. வீராசாமி செட்டியார் நகை நெளிய, உவமை, பழமொழி ஆகியன ஊடே வர, சுவை சொட்ட விநோதரச மஞ்சரி என்ற உரைநடை நூலை எழுதினார். ஓசை நலமும் கவிதை ஓட்டமும் உடைய ஓர் உணர்ச்சி நடையினை உருவாக்கியவர் பி.ஆர்.இராஜமையர். இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டின் நடைக்கு வித்திட்டவர் ஆவர். இராஜமையருடைய கமலாம்பாள் சரித்திரம் வாழ்க்கையை உள்ளவாறு காட்டும் ஒரு முயற்சி.