Primary tabs
- பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள்
ஆகியோரின் திருத்தொண்டையும் திருமால் மீது
அவர்கள் கொண்ட காதலையும் விவரித்துக் கூறுகிறது
இப்பாடம். - பல்லாண்டு வாழ அருள்புரியும் பெருமானுக்குப்
பல்லாண்டு பாடிய பெரியாழ்வார், தாயாக மாறிக் கண்ணனைத் தாலாட்டிப் பரவசமடைந்தவர்.
பிள்ளைத்தமிழ் இலக்கிய வகை தோன்ற வித்தூன்றிய
பெருமைக்கும் உரியவர். - தொண்டர் அடிப்பொடியாழ்வாரோ திருமாலையே
சரணடைந்து அவன் நாமத்தைச் சொல்லுவதில் பெரும் பேறடைந்தவர். திருவரங்கனின் பெருமையும்
இராமாவதாரச் சிறப்பும் இவர் பாசுரங்களில் விளக்கம் பெறுகின்றன. - திருப்பாணாழ்வாரின் பாசுரங்கள் இறைவனையே
மகிழ்வித்து நம்பாடுவான் என்ற நாமத்தைச்
சூட்டும்படி செய்தன. - மன்னர் பரம்பரையில் பிறந்தும் மண்ணரசு வேண்டாது
விண்ணரசை வேண்டி நின்றவர் குலசேகர ஆழ்வார். திருவேங்கடத்தான் கருணையை எதிர்நோக்கியிருந்தவர்,
தானே தசரதனாகி இராமாவதாரப் பெருமையைப் பாடி மகிழ்ந்தவர். - இறைவன் சூட வேண்டிய மாலையைத் தான் சூடிக்
கொடுத்து, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை அருளிச்செய்து, ஆழ்வார்களில் ஒருவராய் உயர்ந்து
நின்றார்; மானிடர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் என்று இறைவனையே அடைந்தவள்.
மேற்கூறிய அனைத்தையும் இப்பாடம் விரிவாகப் பேசுகிறது.
- பூமாலை தொடுத்துத் திருமாலை வழிபட்டவர்களாகிய பெரியாழ்வாரும்
தொண்டரடிப்பொடி ஆழ்வாரும்
அருளிய பாசுரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். - இறைவனுக்குப் பாசுரங்களால் மாலை தொடுத்துச்
சொல் மாலையை இசைபாடிச் சூட்டிய
திருப்பாணாழ்வாரின் பாதாதி கேச (திருவடி முதல்
திருமுடிவரை) வருணனையில் தோய்ந்து பக்தி
இலக்கிய வகையை அடையாளங் காணலாம். - இராம அவதாரத்தில் தோய்ந்து தந்தையாக நின்று,
இராமன் மேல் கொண்ட காதலைப் புலப்படுத்திய
குலசேகரரின் "மகன்மேல்காதல்நெறியில்" ஆழ்ந்து அனுபவிக்கலாம். - பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண்ணான
ஆண்டாள் (பக்திக்) காதலின் ஆளுமையை
அடையாளங் காணலாம். - ஒவ்வொரு ஆழ்வாரும் காட்டும் பக்திக் காதலின்
புலப்பாட்டு நெறியில் தோய்ந்து, அவர்கள் (உளவியல்
பாங்கில் நின்று) தாயாக - தலைவியாக - தந்தையாக- அடியாராகப் பாவிக்கும் பாவனை முறைகளைத்
தொகுத்துப் பட்டியலிடலாம். - அரங்கன் மீது கொண்ட காதலில் கனிந்து
நின்ற
ஆண்டாளின் தனித்தன்மையை அறிந்து கொள்ளலாம்.