தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 1 Main-குண்டலகேசி


  • ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.

    தொல்காப்பியம், யாப்பருங்கலம், வீரசோழியம், நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இப்படிக் கிடைத்த பாடல்கள் பத்தொன்பது என்று கூறுகிறார்கள். புறத்திரட்டிலும் (புறப்பொருள் பற்றிய செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டித் தொகுக்கப்பட்ட தொகைநூல்) குண்டலகேசிப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நீலகேசிக்கு, சமய திவாகர வாமன முனிவர் எழுதிய உரையில் குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்புகள் காணப்படுகின்றன.

    குண்டலகேசியின் துறவும் சமயப் பணிவும்

    தன்னைக் கொல்ல நினைத்த கணவனைக் கொன்றபின் குண்டலகேசி வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு உஞ்சைமாநகர் சென்று அருகச்சந்திரன் என்னும் பௌத்தத் துறவியிடம் அருள் உபதேசம் பெற்றுப் புத்தரின் பெருமைகளை - அவரின் அறவுரைகளை எங்கும் பரவ வகை செய்தாள். பல சமயவாதிகளுடன் வாதிட்டுப் பௌத்த சமயத்தின் பெருமையை நிலைநாட்டினாள் குண்டலகேசி.

    • புலனடக்கமே மெய்யான தவம்.

    • மனத்தூய்மை உடையவர்க்கே இன்பமும் புகழும் உரியன.

    • ஆசையினை அனுபவித்து அழிக்கலாம் என்பது எரியும் தீயை நெய் கொண்டு அணைக்கலாம் என்பதை ஒக்கும்.

    • நாள் என்று சொல்லப்படுகின்ற வாளின் வாயில் மக்கள் தலை வைத்துள்ளனர்.

    • எல்லாம் ஊழால் அமைவன.

    • அதனால் இழப்பின்போது வருந்துதல் வேண்டாம்.

    • ஆக்கத்தின்போது மகிழ்தலும் வேண்டாம்.

    என்பன போன்ற அறங்களைக் குண்டலகேசி திறம்பட எடுத்துரைக்கிறது.

    புத்தரின் பெருமை

    குண்டலகேசியின் கடவுள் வாழ்த்துப் புத்தரின் பெருமையைக் கீழ்வருமாறு விளக்குகிறது.

    • பிறர் மெய்யுணர்வு பெற்று வீடுபேறு அடைவதற்கு முன்பே,
      அம்மெய்யுணர்வைத் தாம் பெற்றுத் துறவை மேற்கொண்டவர்.

    • தாம் வீடுபேறு அடையும்வரை பிற உயிர்க்கு நன்மைதரும் வழிகளை ஆராய்ந்து உணர்ந்தவர்.

    • தாம் உணர்ந்த நல்லறங்களை மக்களுக்கு அறிவுறுத்தியவர்.

    • எதையும் தாம் விரும்பாது பிறருடைய நன்மையின் பொருட்டே முயற்சிகளை மேற்கொண்டவர்.

    இத்தகைய அருங்குணங்களை  உடைய புத்தரே எம்இறைவன். அப்பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து வணங்குவோம் என்றுரைக்கும் பாடல் இதோ.

    முன்தான் பெருமைக்கண் நின்றான் முடிவு எய்துகாறும்
    நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கு என்று
    ஒன்றானும் உள்ளான் பிறர்க்கே உறுதிக்கு உழந்தான்
    அன்றே இறைவன் அவன்தாள் சரண் நாங்களே
    நிலையாமைக் கோட்பாடு

    இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றைக் கூறி, கணந்தோறும் நாம் இறந்து கொண்டிருக்கிறோம். ஆயினும் பிறர் இறப்புக்கு அழுகின்றோம். நம் இறப்புக்கு அழுவதில்லை. இதற்கு என்ன காரணம்? அறியாமைதானே? இப்படிக் கூறுவதின் வாயிலாகக் கூற்றுவன் வருவதற்கு முன் அறச்செயல்களைச் செய்து நல்வினையைப் பெருக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறது குண்டலகேசி. அந்தப் பாடலைப் பார்ப்போமா?


    பாளையாம் தன்மை செத்தும்
        பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும்
        காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ்வியல்பு பின்னே
        மேல்வரு மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றாமால்
        நமக்கு நாம் அழாதது என்னே!

    குண்டலகேசியின் சிறப்பு

    குண்டலகேசி முழுவதும் கிடைக்கவில்லை யென்பது முன்பு கூறியது போல் இழப்புதான். ஆயினும் நீலகேசி என்ற சமணக் காப்பியம் தோன்றி தர்க்க நூல்களின் வரிசையில் சிறப்புப் பெறக் காரணமாக அமைந்தது குண்டலகேசி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் தோன்றிய முதல் தர்க்கநூல் என்ற சிறப்பிற்கும் உரியது குண்டலகேசி.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-06-2018 14:42:24(இந்திய நேரம்)