தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 1 Main-பிற நூல்கள்


  • பௌத்த சமயத்தவர் மிகுந்த  செல்வாக்கோடு தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். சமயத்தைப் பரப்பப் பல நூல்களையும் இயற்றியுள்ளனர். ஆயினும் பல நூல்களின் பெயர்களைத்தாம் அறிய முடிகிறதே தவிர நூல் முழுவதையும் கண்டறிய முடியவில்லை. காலத்தால் அழிந்தன சில; பாதுகாப்பார் இல்லாமல் அழிந்தன சில. எப்படியாயினும் அது தமிழுக்குப் பேரிழப்பு என்பதில் மறுகருத்து இருக்க இயலாது.

    6.6.1 சித்தாந்தத் தொகை

    சித்தாந்தத் தொகை இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. பௌத்தமதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனக் கூறுவர். இயற்றிய ஆசிரியர் பெயரோ காலமோ தெரியவில்லை.

    ‘மருள்தரு மனம் வாய் மெய்யிற் கொலை முதல்
              வினை பத்தாமே’

    என்பது சித்தாந்தத்தொகை என்பதாக, நீலகேசி புத்தவாதச் சருக்கத்தில் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி வேறுசெய்திகள் ஏதும் கிடைக்கவில்லை.

    6.6.2 திருப்பதிகம்

    இதுவும் தமிழுக்குக் கிடைக்கவில்லை. இந்நூல் ஆசிரியர் அவருடைய காலம் ஏதும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் செய்யுள் உரையில் ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, இது திருப்பதிகம் எனக் கொள்க என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

    எண்ணிகந்த காலங்கள் எம்பொருட்டால் மிகவுழன்று
    எண்ணிகந்த காலங்கள் இருந்தீர ஒருங்குணர்ந்தும்
    எண்ணிகந்த தானமும் சீலமும் இவையாக்கி
    எண்ணிகந்த குணத்தினான் எம்பெருமான் அல்லனோ
        

    6.6.3 விம்பசாரன் கதை

    நீலகேசி உரையினால் (130-வது பாட்டு உரை) இப்படியொரு நூல் இருந்ததை அறிகிறோம். நீலகேசி உரையாசிரியர் விம்பசாரக் கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, இது விம்பசாரக் கதை என்னும் காவியம், பௌத்த சமய நூல். அதன்கண் கண்டு கொள்க என எழுதியுள்ளார். ஞானப்பிரகாசரும் நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய நான்கடிகளை மேற்கோள்காட்டி விம்பசாரன் கதையைப் பற்றி எழுதியுள்ளார். இதைப்பற்றி வேறெந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.

    இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும் அவருக்குப் பலவிதத்திலும் தொண்டு செய்து அவரை ஆதரித்து வந்தவனுமான விம்பசாரன் என்னும்  அரசனது வரலாற்றைக்  கூறுவது இக்காப்பியம் என்கிறார் மயிலை சீனிவேங்கடசாமி. (பௌத்தமும் தமிழும் : 115)

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:47:07(இந்திய நேரம்)