Primary tabs
-
2.2 கல்வெட்டும் நாடகங்களும்
பத்தாம் நூற்றாண்டுக் காலக் கல்வெட்டுக்களில் அக்கால நாடகக் கலைகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. கூத்து ஆடிய கலைஞர்கள் பற்றிய தகவல்களும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் புகழ்மிக்க கோயில்களில் ஆண்டுதோறும் விழாக்காலங்களில் தமிழ்க்கூத்து, ஆரியக் கூத்து, சாக்கைக் கூத்து, சாந்திக் கூத்து ஆகியவை நடைபெற்றமைக்கு ஏராளமான கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், இவ்வகைக் கூத்துகளின் நிகழ்த்துபொருள் (நடிக்கப்பட்ட கதை) பற்றியும், அவை நிகழ்த்தப்பட்ட (நடிக்கப் பெற்ற) விதம் பற்றியும் தெளிவான செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை. மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் எழுதிய மத்தவிலாசப்பிரகசனம், பகவத்தஜ்ஜுகீயம் போன்ற வடமொழி நாடகங்கள் நமக்குக் கிடைத்திருப்பன போல், தமிழ் நாடகங்கள் கிடைக்கவில்லை. இராசராசேச்சுவர நாடகம் மற்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் பூம்புலியூர் நாடகம், திருமூலநாயனார் நாடகம் ஆகியவற்றின் எழுத்து வடிவங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொன்மைத் தமிழ் நாடகத்தின் போக்கை அறிய உறுதியான பதிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.