Primary tabs
-
5.0 பாட முன்னுரை
அன்பார்ந்த மாணவர்களே! இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு உரைநடை பெருந்தொண்டு செய்துள்ளது. காலந்தோறும் மாறிவரும் வளர்ச்சிக்கு ஏற்பத் தமிழ் உரைநடையும் மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. இன்று எத்துறையையும் எளிதாக உரைநடை கொண்டு விளக்கும் நிலை உள்ளது. ஆனால் உரைநடைத் தோற்றம் கொண்ட காலத்தில் கவிதையே எல்லாத் துறைகளையும் விளக்கும் கருவியாக இருந்தது. கவிதையின் துணையாக வளர்ந்த உரைநடை தொன்மைக் காலத்தில் எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பதை நீங்கள் இப்போது பயிலுகின்றீர்கள். இதில் உரைநடைத் தோற்றம், ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ பற்றிய விளக்கம், உரைநூல்கள், உரையாசிரியர்கள் தொடக்கம் மேல் நாட்டார் வரும்வரை வளர்ச்சி பெற்றிருந்த உரைநடையின் தன்மை ஆகியன பற்றி அறிந்து கொள்வீர்கள்.