Primary tabs
-
6.4 செம்மையாக்கம் (Editing)
செய்தித்தாளுக்கு வரும் எழுத்துப் படிகளைத் (copy) தேர்ந்தெடுத்து, அச்சிடுவதற்குத் தகுந்தாற் போல் மாற்றி அமைப்பதை செம்மையாக்கம் (Editing) என்பர்.
6.4.1 கவனத்தில் கொள்ள வேண்டியவை
செம்மையாக்கம் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை கீழே குறிப்பிடப் பெறுகின்றன.
•
எழுத்துப் படியில் உள்ள விவரங்கள் சரியானவையா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் வரும் பெயர்கள், நேரங்கள், இடங்கள் ஆகியவை சரியாக இல்லாவிட்டால் அவற்றைச் சீர் செய்ய வேண்டும்.
•
பிறர் மனம் வருந்தக் கூடிய சொற்கள், செய்திகள், அவதூறான செய்திகள், தொடர்கள் ஆகியவற்றை அகற்றி விடவேண்டும்.
•
எழுத்துப் பிழை, வாக்கியப் பிழை, இலக்கணப் பிழை ஆகியவற்றைத் திருத்த வேண்டும்.
•
தெளிவில்லாத பத்திகளை நீக்கி விட்டுப் புரியும்படி எழுத வேண்டும்.
•
செய்தியில் நிருபரின் கோபங்கள், உணர்ச்சிகள், சொந்தக் கருத்துகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்.
•
செய்தித்தாளுக்குரிய மரபுகள் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும்.
•
செய்தியின் முக்கியத்துவத்திற்குத் தகுந்தாற் போல், அது செய்தித்தாளில் எந்தப் பக்கத்தில் எந்த இடத்தில் அமைய வேண்டும் எனக் குறிக்க வேண்டும்.
•
செய்தியைச் செப்பனிட்ட பின்னர் அதற்குத் தலைப்புக் கொடுக்க வேண்டும். அத்தலைப்பு வாசகர் மனங்களைக் கவர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். இந்த தலைப்புத்தான் செய்தித்தாளுக்கு அழகைக் கொடுக்கிறது.
•
செய்திகளைச் செப்பனிடும் பொழுது கலைச்சொற்கள் வாசகர்களுக்குப் புரியாது என்று ஆசிரியர் நினைத்தால், அவற்றை அவர் எளிமைப் படுத்தித் தர வேண்டும். எந்தெந்தச் செய்தியை எந்தெந்த எழுத்து அளவில் வெளியிடுவது, எப்படிப் பத்திகளாகப் பிரித்து எழுதுவது, செம்மையாக்கக் குறியீடுகளை எங்கெங்கு எப்படிப் பயன்படுத்துவது என்னும் விதிமுறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு செப்பனிட்ட பின்னர், செய்திகள் இயந்திரப் பகுதிக்கு அச்சிற்காக அனுப்பப்படுகின்றன.