தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112l3-2.4 தமிழ்த் தொடர்

2.4 தமிழ்த் தொடர்

    சொற்கள் ஒன்றுடன் ஒன்று பொருள் தரும் முறையில்
தொடர்வது தொடர் ஆகும். தொடர் வாக்கியம் என்றும்
வழங்கப்படுகிறது. தொடர்கள் உருவாக்கப்படும் முறையை
ஆய்வது தொடரியல் ஆகும். தமிழைப் பொறுத்த வரை,
‘இந்தச் சொல் இந்தச் சொல்லோடுதான் சேரலாம்’ என்ற
நெறிமுறை உண்டு.

    எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்ற மூன்று
உறுப்புகள் இணைந்து தொடர் அமையும். எழுவாய் என்பது
பெயர்ச்சொல். தொடரில் எழுவாய் பெரும்பாலும் முதலில் வரும்.
பயனிலை என்பது வினைச்சொல், பெயர், வினை என்ற
கூறுகள்தாம் எழுவாய், பயனிலை ஆகிய செயல்களை
நிகழ்த்துகின்றன. பயனிலை பெரும்பாலும் தொடரின் இறுதியில்
வரும். எழுவாய்க்கும்,     பயனிலைக்கும்     இடையில்
செயப்படுபொருள் வரும். ஒரு தொடரில் எழுவாய், பயனிலை
தவறாது இருக்கும்.     செயப்படுபொருள் அமையலாம்.
செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமைவது உண்டு.

கண்ணன் வந்தான் - இத்தொடரில்
கண்ணன்
எழுவாய் (பெயர்ச்சொல்)
வந்தான்
பயனிலை (வினைச்சொல்)
செயப்படுபொருள்
இடம் பெறவில்லை என்பது குறிக்கத்
தக்கது.
முருகன் வள்ளியை மணந்தான் - இத்தொடரில்
முருகன்
எழுவாய்
வள்ளியை
செயப்படுபொருள்
மணந்தான்
பயனிலை

பெயருக்கு முன்னும், வினைக்கு முன்னும் அடைகள்
அமைவது உண்டு. அவை பெயரடை, வினையடை
எனப்படும்.

    ஒரு சொல்லே தொடராக அமைதலும் உண்டு. ‘நட’ என்பது
ஒரு தொடர். நீ நட என்றால் எழுவாய் + பயனிலை உள்ள
தொடர் ஆகிறது. அவன் நடந்தான் என்றால் முற்றுத் தொடர்.
நடந்த அவன் என்பது எச்சத் தொடர். வந்த வேலன் என்பது
பெயர் எச்சத் தொடர்
. செய்ய வந்தான் என்பது வினை
எச்சத் தொடர்
.

என்று கூறலாம். தொடர்களை,

தன்வினைத் தொடர்
- பிறவினைத் தொடர்,
செய்வினைத் தொடர்
- செயப்பாட்டு வினைத்தொடர்,
உடன்பாட்டுத் தொடர்
- எதிர்மறைத் தொடர்,
செய்தித் தொடர்
- கட்டளைத் தொடர்,
உணர்ச்சித் தொடர்
- வினாத் தொடர்.

என்று வகைப்படுத்தலாம். ஒரு தொடரை மற்றொரு வகைத்
தொடராக மாற்ற முடியும்.

  • தன்வினை - பிறவினைத் தொடர்கள்
  • நான் நேற்று எழுதினேன்.
    தன்வினைத் தொடர்
    மாணவர்களை நான் நேற்று
    எழுத வைத்தேன்.
    பிறவினைத் தொடர்
    திருக்குறளைத் திருவள்ளுவர்
    இயற்றினார்.
    செய்வினைத் தொடர்
    திருவள்ளுவரால் திருக்குறள்
    இயற்றப்பட்டது.
    செயப்பாட்டு வினைத்
    தொடர்
    இந்த வகுப்பில் சிலரே நன்றாகப்
    படிக்கின்றனர்.
    உடன்பாட்டு வினைத்
    தொடர்
    இந்த வகுப்பில் பலர் நன்றாகப்
    படிக்கவில்லை.
    எதிர்மறை வினைத்
    தொடர்
    எவரும் வெற்றி பெற விரும்புவர்.
    செய்தித் தொடர்
    எவரே வெற்றி பெற விரும்பாதார்!
    உணர்ச்சித் தொடர்
    வெற்றி பெற விரும்பாதார் யார்?
    வினாத் தொடர்
    வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
    கட்டளைத் தொடர்

  • தொடர் இலக்கணம்
  •     கீழ்க்காணும் தொடரில் உள்ள எழுவாய், பயனிலை,
    செயப்படுபொருளைப் பிரித்துக் காண்போமா?.

    கண்ணன் என்னை நேற்றுச் சந்தித்தான்.
    கண்ணன் - எழுவாய்
    என்னை
    செயப்படுபொருள்
    என் + ஐ
    தன்மைப் பெயர் (என்) இரண்டாம்
    வேற்றுமை உருபு (ஐ)
    நேற்றுச் சந்தித்தான்
    - பயனிலை
    நேற்று
    - வினையடை
    சந்தித்தான்
    - இறந்த கால வினைமுற்று.
  • சொற்றொடர் - உறுப்புகளின் அண்மை உறவு
  • ஒரு தொடர் உருவாக மூன்று உறுப்புகள் வேண்டும்.
    எழுவாய், பயனிலை ஆகிய இரண்டு உறுப்புகளாலும் கூடத்
    தொடர் உருவாகும் என்பதையும் அறிவோம் அல்லவா?.

        இந்த உறுப்புகள் அண்மை உறவு பெற்றுத் தொடரும்போது தொடர் உருவாகிறது.

    இராமன் சீதையை மணந்தான் -இத்தொடரில்,

    இராமன் - எழுவாய்
    மணந்தான் - பயனிலை
    சீதையை - செயப்படு பொருள்

        இப்படிச் சொற்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து தொடர்
    உருவாகும்     முறையைப்     பரிசீலிப்பது     தொடர்
    இலக்கணம்
    அல்லது தொடரியல் (syntax) ஆகும். இதுபற்றி
    விளக்கமாகப் பின்னர்ப் படிப்பீர்கள். இங்குத் தெரிந்து கொள்ள
    வேண்டுவது: தமிழில் ஒரே சொல் தொடராதல் உண்டு;
    சொற்கள் தொடர்ந்து தொடர் உருவாவது உண்டு. எழுவாய்,
    பயனிலை, செயப்படுபொருள் என்பவற்றின் நெருங்கிய
    உறவுடைய சேர்க்கையே தொடர் எனப்படும். ஆகவே உறுப்புகள்
    அண்மை உறவு பெற்றுத் தொடர்வது தொடர். சொற்களின்
    தொகுப்பு எல்லாம் தொடர் ஆகிவிடாது. ‘இதனை அடுத்து இது
    வரும்’ என்ற தொடரமைப்பு விதிமுறைகள் உண்டு. தொடர்களை
    வெவ்வேறு வகைகளாக இனம் காணலாம். எழுத்துத் தமிழ்,
    பேச்சுத் தமிழ், கவிதைத் தமிழ் இவற்றின் இடையே தொடர்
    அமைப்பில் சிறு வேறுபாடுகள் இருப்பது உண்டு.

        தமிழ்த் தொடரமைப்பில் அடையை (adjective - பெயரடை;
    adverb - வினையடை) முன் பின் மாற்ற முடியாது. பிற
    சொற்களைத் தொடரில் முன் பின் இடம் மாற்ற முடியும். மாற்றிப்
    பொருள் கொள்ளும் முறை ‘பொருள்கோள்’ என்று தமிழ்
    இலக்கணத்தில் சொல்லப்படுகிறது.

        தொடரில் கருத்தா (செய்பவன்) இல்லாமலே அமைக்க
    முடியும்.

        ‘வந்தேன்’ என்றாலே போதும்,
        ‘நான் வந்தேன்’ என்று உணரலாம்.

    தனித் தொடர் அமைப்பு, தொடர்களுக்கு இடையிலான
    தொடர்பு என்ற இரண்டும் இன்றியமையாதவை. தமிழ்ச்
    செய்யுளில் தனித் தனித் தொடர்கள் இடம் பெறுகின்றன. அவை
    ஒன்றுடன் ஒன்று திறம்பட இணைக்கவும் படுகின்றன.

        இருவர் நேருக்கு நேர் பேசிக்கொள்வது கருத்தாடல் ஆகும்.
    ஒருவர் பேச மற்றவர் அமைதியாகக் கேட்பதும் கருத்தாடலே.
    கருத்தாடலில் தொடர் அமைப்பு நெறிகள் நெகிழ்வாகவே
    பின்பற்றப்படுகின்றன. ஆனால் ‘கருத்துணர்த்தல்’ முதலிடம்
    பெறுகிறது.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:45:53(இந்திய நேரம்)