தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5-5.8 முப்பொருட்களின் வழுவும் அமைதியும்

5.8 முப்பொருட்களின் வழுவும் அமைதியும்

முதற்பொருள், கருப்பொருள்,     உரிப்பொருள்     என்பன
முப்பொருள்களாகும். இவை தத்தமக்கு உரிய திணைகளோடு பொருந்தி
வருதல் இயல்பானது. அவ்வாறின்றிப் பிற திணையோடு மாறி - கலந்து-
மயங்கி வருதல் உண்டு. அவற்றைத் திணை மயக்கம் என்னும்
தலைப்பில் குறிப்பிடுவர். அவ்வாறு வருவது குற்றமாயினும்
ஏற்றுக்கொள்ளலாம் என்று வழங்கும் சமாதானம் வழு அமைதி
எனப்படும்.

இவ்வாறு முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருளும் மயங்கி
வருவதைச் சங்க இலக்கியத்தில் பற்பல பாடல்களில் காணமுடிகிறது.

உதாரணம்

புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை

வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்

குன்றுகெழு நாடன் மறந்தனன்

பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே

(ஐங்குறுநூறு, 265)

விளக்கம்

இப்பாடலில் இடம்பெற்ற முப்பொருள்களாவன:

முதற்பொருள்

குன்று (மலை)
இது குறிஞ்சித்
திணை

கருப்பொருள்

புலி, பன்றி
இவையும் குறிஞ்சித்
திணைக்கு உரியவை

உரிப்பொருள்

புதல்வனையும், என்னையும்
விட்டுவிட்டுத் தலைவன்
பரத்தையிடம்     சென்று
விட்டான் என்று கூறித்
தலைவி பிணக்குக் கொள்வது
(ஊடல்)
இது மருதத்
திணைக்கு உரியது.

குறிப்பு: இப்பாடலில் குறிஞ்சித் திணையில் மருதத்திற்கு உரிய
உரிப்பொருளாகிய ஊடல் மயங்கி வந்துள்ளதை மேற்காணும்
விளக்கம் நன்கு புலப்படுத்தும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 11:54:09(இந்திய நேரம்)