தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.0

  • 1.0 பாட முன்னுரை
    மொழி என்பது கருத்து விளக்கக் கருவியாகும்.ஒருவர் தன்
    கருத்தை விளக்கப் பல சொற்களைப் பயன்படுத்துவார். ஒரு
    சொல் மட்டும் தனித்து நின்று, அவர் உணர்த்த நினைத்த
    கருத்துகள் அனைத்தையும் விளக்கிவிடாது. எனவே, ஒரு
    கருத்தை விளக்கப் பல சொற்கள் தேவைப்படுகின்றன.

    சொற்றொடர் என்பது சொல்+தொடர் எனப் பிரியும்.
    ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் மறைந்து நின்றோ, வெளிப்பட
    வந்தோ, பொருள் தொடர்போடு பொருந்தி, ஒரு கருத்தை
    விளக்குவது சொற்றொடர் எனப்படும்.

    (எ.டு.) மரம்

    ஒரு சொல் மட்டும் தனித்து வந்துள்ளது. இது, தான் குறித்து
    வரும் ஒரு பொருளை மட்டும் உணர்த்துகிறது. ஆனால்
    எதற்காக இது சொல்லப்பட்டது என்பதை அறிய முடியவில்லை.
    எனவே இது சொற்றொடர் அன்று.

    (எ.டு.) வா

    வா என்னும் சொல் ஏவல் பொருள் உணர்த்தும் போது ‘நீ’
    என்னும் எழுவாய் மறைந்து (தோன்றா எழுவாய்) வந்து ஒரு
    சொற்றொடர் ஆகிறது.

    (எ.டு.) பெண்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்.

    இந்த எடுத்துக்காட்டில்    பல    சொற்கள்    பொருள்
    தொடர்போடு பொருந்தி நின்று ஒரு சொற்றொடர் ஆகிறது.

    (எ.டு.) மலை வெண்மை நீந்துவதற்கு வாழை.

    இந்த எடுத்துக்காட்டுத்    தொடரில்    பல சொற்கள்
    இடம்பெறினும்     அவைகளுக்கு    இடையே    எவ்விதப்
    பொருள்தொடர்பும் இல்லை. எனவே இவ்வெடுத்துக்காட்டுச்
    சொற்றொடர் ஆகாது.

    சொற்றொடரில் பல சொற்கள் இடம் பெறுகின்றன.
    சொற்றொடரில் இடம்பெறும் சொற்களின் பொருள் தொடர்பை
    இப்பாடம் விளக்குகிறது. சொற்றொடர்கள் பல வகைப்படும்.
    அவற்றையும் இப்பாடம் உணர்த்துகிறது. சொற்றொடர்களை
    வாக்கியங்கள் என்றும் குறிப்பிடுவர். அதனைப் பற்றியும்
    அறியலாம்.

    மேலும் இப்பாடம், சொற்றொடரியலை அறிமுகம் செய்வதால்,
    சொற்றொடரியலுக்கு அடிப்படையான செய்திகளைப் பல்வேறு
    தலைப்புகளாகப் பிரித்துக்கொண்டு விவரிக்கிறது.

    இப்பாடத்தில் இடம்பெறும் செய்திகள் முந்தைய பாடங்களில்
    கற்றவையாயினும், சொற்றொடரியல் நோக்கில் அவை பற்றிய
    செய்திகள் இங்கு விளக்கப்படுகின்றன என்பதறிக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:12:18(இந்திய நேரம்)