தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சொல் வகை

  • 1.1 சொல் வகை
    தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை,

    1) பெயர்ச்சொல்
    2) வினைச்சொல்
    3) இடைச்சொல்
    4) உரிச்சொல்

    (எடு.)
    மலை
    -
    பெயர்ச்சொல்
    சென்றான்
    -
    வினைச்சொல்
    -
    இடைச்சொல்
    மா
    -
    உரிச்சொல்

         சொற்களை இயல்பும் இடமும் நோக்கி வேறு நான்கு
    வகையாகப் பிரிப்பர். அவை,

        1) இயற்சொல்
        2) திரிசொல்
        3) திசைச்சொல்
        4) வடசொல்

    • இயற்சொல்:
    இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நிலத்தில் கற்றவர்க்கும்
    கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டு
    வழங்கிவரும் சொல்லாகும்.
        (எ.டு.) மரம், வந்தான்

        செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
        தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
                     (நன்னூல்:271)

    • திரிசொல்:
        திரிசொல் என்பது கற்றவர் மட்டுமே பொருள்
    உணரக்கூடியது. இஃது ஒரு பொருள் குறித்த பல
    சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.

    (எ.டு)

    கிள்ளை, தத்தை, சுகம்
    -
    கிளி என்னும் ஒரு பொருள் குறித்த
    பல திரிசொல்.
    வாரணம்
    -
    யானை, கோழி, சங்கு முதலிய     பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.


         ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்
        பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
        அரிதுணர் பொருளன திரிசொல் ஆகும்
              (நன்னூல் : 272)


    • திசைச்சொல்:
         திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம்
    தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும்
    சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம்
    கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.

        (எடு.) சிறுகுளம் - பாழி என்பர் பூழிநாட்டார்
            - கேணி என்பர் அருவாநாட்டார்

        செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
        ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்
        தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப
                 (நன்னூல் : 273)

    • வடசொல்:
         வடசொல் என்பது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரிய
    பொது எழுத்தாலும், சிறப்பெழுத்தாலும் இவ்விருமொழிகளுக்கும்
    உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இது
    தமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை     மொழியான
    ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.


    காரியம்
    -
    பொது எழுத்தால் அமைந்தன.
    போகி, சுத்தி
    -
    சிறப்பெழுத்தால் அமைந்தன.
    கடினம், சலம்
    -
    இருவகை எழுத்தாலும் அமைந்தன.

        பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்
         ஈரெழுத் தானும் இயைவன வடசொல்
                (நன்னூல் : 274)


        மேலே குறிப்பிட்ட பெயர்ச்சொல் முதலிய நான்கையும்,
    இயற்சொல் முதலிய நான்கையும் இணைத்து,

        1) பெயர் இயற்சொல்
        2) பெயர்த் திரிசொல்
        3) வினை இயற்சொல்
        4) வினைத் திரிசொல்
        5) இடை இயற்சொல்
        6) இடைத் திரிசொல்
        7) உரி இயற்சொல்
        8) உரித் திரிசொல்
        9) திசைச்சொல்
        10) வடசொல்

    எனச் சொற்களைப் பத்தாகக் குறிப்பிடுவதும் உண்டு.

        அதுவே
        இயற்சொல் திரிசொல் இயல்பில் பெயர்வினை
        எனஇரண்டு ஆகும் இடைஉரி அடுத்து
        நான்கும் ஆம்திசை வடசொல்அணு காவழி
                 (நன்னூல் : 270)


        சொற்கள் பற்றிய விரிவான செய்திகளை அவை
    தொடர்பான முந்தைய பாடங்களில் விரிவாகப் படித்திருப்பீர்கள்.
    அவற்றை இங்கு நினைவுபடுத்திக் கொள்க.

        இப்பாடம், தலைப்புக்கு ஏற்பச் சொற்றொடரில் இடம்பெறும்
    பெயர், வினை, இடை, உரி என்னும் நான்கு வகையில்
    பிரித்துச் சுருக்கமாக விளக்குகிறது.

    1.1.1 பெயர்ச்சொல்

         ஐம்புலனுக்கும்      மனத்திற்கும்     புலப்படும்
    பொருள்களைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
    இஃது ஆறு வகைப்படும். அவை,

    1) பொருட் பெயர்,
    2) இடப் பெயர்,
    3) காலப் பெயர்,
    4) சினைப் பெயர்,
    5) பண்புப் பெயர்,
    6) தொழிற் பெயர்.

    என்பன.

    (எ.டு)

    புலி, கல்
    -
    பொருட் பெயர்
    வீடு, தமிழகம்
    -
    இடப் பெயர்
    கிழமை. ஆண்டு
    -
    காலப் பெயர்
    கை, கால்
    -
    சினைப் பெயர்
    செம்மை, ஒன்று
    -
    பண்புப் பெயர்
    வாழ்தல், புகழ்தல்
    -
    தொழிற் பெயர்

        
    1.1.2 வினைச்சொல்

         வினைச்சொல் என்பது, பொருளினது செயலை உணர்த்தும்
    சொல்லாகும். வினை, தொழில், செயல் என்பவை ஒரு பொருள்
    குறித்த சொற்கள்.

        தெரிநிலைவினை என்பது வினைமுதல், கருவி, இடம்,
    செயல், காலம், செயப்படுபொருள் என்னும் ஆறின்
    காரணமாகவோ, அல்லது இவ்வாறில் பலவற்றின் காரணமாகவோ
    நிகழும்.

    (எ.டு)

    வனைந்தான்
    -
    தெரிநிலைவினை
    வினைமுதல்
    -
    குயவன்
    கருவி
    -
    தண்டு, சக்கரம், மண் முதலியன
    இடம்
    -
    வனைதற்கு ஆதாரமான இடம்
    செயல்
    -
    வனைவதற்கு முதற்காரணமாகிய
    செய்கை
    காலம்
    -
    இறந்தகாலம்
    செயப்படுபொருள்
    -
    குடம்

    செய்பவன் கருவி நிலஞ்செயல் காலம்
    செய்பொருள் ஆறும் தருவது வினையே
             (நன்னூல் : 320)

    1.வினைமுற்றும் வினையெச்சமும்

        வினையைச்     செயல் முற்றுப் பெறுவதையும்
    முற்றுப்பெறாமல் குறையாய்     நிற்பதையும்     கொண்டு
    இருவகையாய்ப் பிரிப்பர். வினையின் செயல் முற்றுப்பெறின்
    வினைமுற்று எனப்பெறும். முற்றுப்பெறாவிடின் எச்சம் எனப்படும்.
    எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் என்றும்,
    வினையைக்கொண்டு முடிந்தால் வினையெச்சம் என்றும்
    அழைக்கப்பெறும்.

    (எடு.)

    வந்தான்
    -
    வினைமுற்று
    வந்த மாணவன்
    -
    பெயரெச்சம்
    வந்து விழுந்தான்
    -
    வினையெச்சம்

    2.தெரிநிலை வினையும் குறிப்பு வினையும்

    இவ்வினைச்சொற்கள் காலத்தை,     வெளிப்படையாகக்
    காட்டினால் தெரிநிலை வினை என்றும், வெளிப்படத்
    தோன்றாமல் குறிப்பாகக் காலம் காட்டினால் குறிப்புவினை
    என்றும் அழைக்கப்படும். மேலே காட்டிய வந்தான், வந்த,
    வந்து என்னும் வினைச்சொற்கள் இறந்த காலத்தைத்
    தெளிவாக உணர்த்துவதால் இவை தெரிநிலை வினைச்சொற்கள்
    எனப்படும்.

    (எ.டு.)

    (அவன்) நல்லவன்
    -
    குறிப்பு வினைமுற்று
    நல்ல மாணவன்
    -
    குறிப்புப் பெயரெச்சம்
    நன்று செய்தான்
    -
    குறிப்பு வினையெச்சம்

        நல்லவன்,      நல்ல, நன்று என்னும் சொற்கள்
    வெளிப்படையாகக் காலம் காட்டாமல் குறிப்பாகக் காலத்தை
    உணர்த்துவதால் இவை குறிப்பு வினைகளாகும்.

        பொருண்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
    வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே             (நன்னூல் : 321)

    அவைதாம்
    முற்றும் பெயர்வினை யெச்சமும் ஆகி
    ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும்
             (நன்னூல் : 322)


    1.1.3 இடைச்சொல்

        இடைச்சொல் என்பது பெயரும் வினையும் போலத் தனித்து
    நடக்கும் ஆற்றல் இல்லாதது ; இது பெயரையும் வினையையும்
    சார்ந்து வரும் சொல்லாகும். இஃது ஒன்றும் பலவுமாக ஒரு
    சொல்லைச் சார்ந்து வரும். இஃது ஒன்பது வகைப்படும். அவை,

    1)
    வேற்றுமை உருபுகள்
    -
    ஐ, ஆல் முதலியன
    2)
    விகுதி உருபுகள்
    -
    ஆன், ஆல் முதலியன
    3)
    இடைநிலை உருபுகள்
    -
    ப், வ், த் முதலியன
    4)
    சாரியை உருபுகள்
    -
    அன், அத்து முதலியன
    5)
    உவம உருபுகள்
    -
    போல, புரைய முதலியன
    6)
    தம்பொருள் உணர்த்துவன
    -
    அ(சுட்டு), ஆ(வினா) முதலியன
    7)
    ஒலிக் குறிப்பு முதலிய பொருள் உணர்த்துவன
    -
    ஓ ஓ, ஐயோ முதலியன
    8)
    (செய்யுளில்)இசைநிறைக்க வருவன
    -
    “ஏஎ இவெளாருத்தி...” முதலியன
    9)
    அசைநிலையாய் வருவன
    -
    “மற்றுஎன்னை ஆள்க” முதலியன


    வேற்றுமை வினைசா ரியையொப்பு உருபுகள்
    தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
    குறிப்பெனெண் பகுதியில் தனித்தியல் இன்றிப்
    பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து
    ஒன்றும் பலவும்வந்து ஒன்றுவது இடைச்சொல்
                 (நன்னூல்: 420)


    1.1.4 உரிச்சொல்

        உரிச்சொல் என்பது, பொருளுக்கு உரிமை உடைய பண்பை
    உணர்த்தும் பெயராகும்.

        பொருள்கள் உயிர்ப் பொருள்கள்,உயிர் இல்லாப் பொருள்கள்
    என இருவகைப்படும்.

        இவ்விருவகைப் பொருள்களுக்கு உரிய பண்பு, குணப்பண்பு,
    தொழிற்பண்பு என இருவகைப்படும்.

        (எ.டு)

    அறிவு, அச்சம் முதலியன
    -
    உயிர்ப் பொருள்களின் குணப் பண்பு
    உண்ணல் முதலியன
    -
    உயிர்ப் பொருள்களின் தொழில் பண்பு
    வண்ணம் முதலியன
    -
    உயிரில் பொருள்களின் குணப் பண்பு
    தோன்றல் முதலியன
    -
    உயிரில்லாப் பொருள்களின் தொழில் பண்பு

        இவ்வாறு உரிச் சொற்கள் ஒரு குணத்தையும் பல
    குணத்தையும் உணர்த்திப் பெயர் வினைகளைச் சார்ந்து வரும்.

    (எ.டு)

    சால, உறு, தவ முதலியன
    -
    மிகுதி என்னும் ஒரு குணம்குறித்தது.
    கடி
    -
    காப்பு, கூர்மை, நாற்றம் முதலிய பலகுணம் குறித்து வரும்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1)
    மொழி எதற்குப் பயன்படுகிறது?
    2)
    தனிச் சொல் தொடராகுமா?
    3)
    பொதுவாகச்    சொற்களை    எத்தனை வகைப்படுத்துகின்றனர்?
    4)
    இயல்பும் இடமும் நோக்கிச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
    5)
    பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
    6)
    வினைச் சொற்கள் குறிக்கும் காரணங்கள்
    எத்தனை?
    7)
    இடைச்சொல் எத்தனை வகைப்படும்?
    8)
    உரிச்சொல் குறித்து வரும் பண்புகளின் வகைகள் யாவை?
    9)
    பொருள்களின் வகைகள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:12:23(இந்திய நேரம்)