Primary tabs
-
1.0 பாட முன்னுரை
தமிழ் நாடகம் மிகவும் தொன்மை வாய்ந்தது ஆகும். இயல்,
இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வடிவங்கள் தமிழின் பன்முகச்
சிறப்பினைப் பிரதிபலிப்பனவாகும். இவற்றில் நாடகம்
எனப்படுவது காட்சித் தமிழ் எனக் கருதப்படுகிறது. மனிதன்
இவ்வுலகில் தோற்றம் கண்ட போதே அவனோடு உள்ளமைந்த
கலைக் கூறுகளைக் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும்.
மேலும், வாழ்வின் கூறுகள் நாடகக் கலையில், ஆழ்ந்த தாக்கம்
ஏற்படுத்த வல்லன. எனினும் அதுபோன்றே நாடகமும் மனித
மனத்துக்குள் ஊடுருவிச் செல்லும் உயரிய கலையாகும்.
அந்நாடகம் குறித்த வரலாற்றுச் சான்றுகள் சங்ககாலம்
முதற்கொண்டே நமக்குக் கிடைக்கின்றன. தொன்மைக்காலம்
தொடங்கி, சங்கம் மருவிய காலம் வரையிலும் உள்ள நாடகம்
குறித்த செய்திகளை இப்பாடத்தின் வழி அறியவிருக்கிறோம்.