Primary tabs
-
3.6 பாவைக்கூத்து
நாட்டுப்புற மக்களைக் கவரும் வண்ணம் சிற்றரங்க நிலையில்
படைத்தளிக்கப்படும் கூத்துகள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள
வேண்டியது முக்கியமாகும். இவை பெரும்பாலும் குறுகிய
வட்டத்திற்குள், குறைந்த பார்வையாளரை மையப்படுத்தி
அமைகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை பொம்மை
வடிவிலான நிழல் கதைப்பாத்திரங்களை உருவாக்கி நடத்தப்
பெறும் கூத்துகளாகும்.
- பாவை வடிவங்கள்
பொம்மைகள் அல்லது பாவைகள் கொண்டு கதை
நிகழ்ச்சியினை நடத்திக் காட்டும் முறை உலகளாவிய நிலையில்
நடப்பில் உள்ளது. மக்களிடையே நன்கு அறிமுகமான
கதைகளும், நடப்பியல் சார்ந்த நிகழ்வுகளும் பாவை வடிவங்கள்
வழி மக்களிடையே கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழகத்தில், மரப்பாவைக் கூத்து மற்றும் தோற்பாவை
நிழற்கூத்து ஆகியன இவ்வகையில் குறிப்பிடத்தக்க கூத்துக்
கலைகளாக விளங்கி வருகின்றன.
- தோற்றம்
பாவை அல்லது பொம்மை வடிவினைக் கொண்டு நடத்திக்
காட்டப்படும் நிகழ்ச்சி இது.
திருக்குறள் பாவைக்கூத்து குறித்த செய்தியைத் தருகிறது.
நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று(திருக்குறள் : 1020)
இவ்வாறாக, தொன்மை இலக்கியங்கள் குறிப்பிடுவதன் வழி
‘பாவையாடல்’, தமிழர்களின் வழி வழி வந்த நிகழ்வாகவே
இருந்துள்ளது.
இப்பாவையாடல் இரு நிலைகளில் காட்சிப் படுத்தப்பட்டு
வருகின்றது. பொம்மைகளின் வடிவமைப்பி்னையொட்டியே
இப்பெயர் பெற்றமைகின்றது.
அவை,1. மரப்பாவைக் கூத்து
2. தோல்பாவை நிழற் கூத்துஆகியனவாகும்.
3.6.1 மரப்பாவைக் கூத்துமரத்தாலான பொம்மைகளின் மூலம் கதை நிகழ்வுகளை
நடத்திக் காட்டும் தன்மையினால் இது மரப்பாவைக் கூத்து என
வழங்கப்படுகிறது.
- மரப்பாவைகளின் உருவாக்கம்
மரப்பாவைக் கூத்துக்கான பொம்மைகள் பெரும்பாலும்
கலியாண முருங்கை மரத்தாலேயே செய்யப்படுகின்றன.
இம்மரத்தின் எடை குறைவான தன்மை முக்கியமான
காரணமாகும்.
முதலில் மரத்தை நீரில் ஊறவிட்டு, பின் நிழலில் காய
வைத்தல் வேண்டும். அடுத்த நிலையில் துண்டு செய்யப்பட்ட
மரங்களில் பொம்மைகளின் உறுப்புகள் வடிவமைக்கப்படும்.
தலைப்பகுதியில் உதடு, கன்னம், மூக்கு போன்றன
அமைக்கப்படும். மார்புப் பகுதியில் துணி சுற்றப்படும்.
பொம்மையி்ன் முதுகில் ஆறு அங்குல துவாரம் இடப்பெற்று,தலை, கை, கால் ஆகிய உறுப்புக்கள்
ஒரு இணைப்பின் மூலம் இழுத்துக்
கட்டப்படும். பொம்மைக்கு,
பாத்திரங்களுக்கேற்ப வண்ணம்
தீட்டப்படுகிறது. ஆடைகளும்,
ஆபரணங்களும் அணிவிக்கப்படும்.பொம்மைகளின் உயரம் பொதுவாக 11/2 அடி முதல் 3
அடிவரை இருக்கும். எடை மூன்று முதல் பத்து கிலோ எடை
வரை இருக்கும். புதிய பொம்மைகள் கண்ணேறு கழிக்கப்பெற்ற
பின்பே பயன்படுத்தப் பெறும்.
பொம்மைகளின் இணைப்பில் பிணைக்கப்படும் ஆதாரம்
‘சுண்டுக் கயிறு’ எனப்படும். பொம்மையின் தலை, கை, கால்,
முதுகு ஆகியவற்றில் பிணைக்கப்பட்டுள்ள சுண்டுக் கயிறுகளின்
மற்றொரு முனை அரை அடி நீளமுள்ள மூங்கில் குச்சிகளில்
கட்டப்பெறும். பாவையாட்டி இக்குச்சிகளைப் பிடித்துக் கொண்டு
கயிறுகளை அசைக்க, பாவைகள் இயங்கத் தொடங்கும்.
- மேடை வடிவம்
மரப்பாவைக் கூத்துக்கான மேடை கூத்தரங்க மேடை என்று
அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 12 அடி நீள அகலமான
மேடையில் 8 அடி உயரத்தில் கூரை வேயப்படுகிறது. மேடையின்
முன்புறத்தில் பாவைகளை ஆட்டுவதற்காக 11/2 அடி இடைவெளி
விட்டுக் கருப்புத் துணியால் மறைக்கப்படுகிறது. பாவையாட்டியின்
கால் அசைவுகள் கறுப்புத் துணியால் மறைக்கும் படியாக
இருக்கும். மேடையின் பின்பகுதியில் நீளவாக்கில் கட்டப்படும்
கயிறில் நிகழ்ச்சிக்குத் தேவையான பொம்மைகள் தொங்க
விடப்பெறும். மேடையில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது.
- இசைக் கருவிகள்
சுதிப்பெட்டி, முகவீணை, மிருதங்கம், சால்ரா, காற்சதங்கை
போன்றவை இசைக்கருவிகளாகப் பயன்படுகின்றன.
- பாவையாட்டிகள்
பாவையாட்டிகள் (பாவைகளை இயக்குவோர்) குரல் வளமும்,
பல குரல் மாற்றத்திறனும் பெற்றுத் திறம்பட்டவர்களாக
விளங்குவர். கதை நிகழ்வின் போக்கினைத் தங்களது பேச்சுத்
திறமையாலேயே செய்து காட்ட வல்லவர்களாகவும் இருப்பர்.
பாவைகளை இயக்க நால்வர், இசைக்கருவிகளை இயக்க நால்வர்,
மற்றும் பொம்மைகளை எடுத்துக் கொடுக்க ஒருவர் என ஒன்பது
பேர் கொண்ட குழு அமையும்.
- நிகழிடங்கள்
இக்காலத்தில் சேலம், மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற
இடங்களில் அந்தந்த வட்டாரத்தின் தனி்த்தன்மையுடன்
இக்கூத்துக்கள் சிறப்புற்று விளங்குகின்றன.
- கதைகள்
மக்களுக்கு அறிமுகமான மகாபாரதம், இராமாயணக் கதைகள்
போன்றவை முக்கியமான பாவைக்கூத்து நிகழ்வுகளாக
நடத்தப்பட்டு வருகின்றன. இன்றைய நிலையில் நடைமுறைச்
செயல்பாடுகளும், விழிப்புணர்வுக் கதைகளும் கூட
பாவைக்கூத்தின் கதைகளாகின்றன.
- நடத்து முறை
கதை நடத்தும் முறை கடவுள் வாழ்த்து, நகைச்சுவைப் பகுதி
மற்றும் கதைப்பகுதி என மூன்று நிலைகளில் அமைகிறது.
தொடக்கக் காட்சியில் பிள்ளையார் தோன்றுகிறார். அதனைத்
தொடர்ந்து பூசைக்குரிய பொருட்களுடன் இருவர் வருகிறார்கள்.
எலி ஒன்று மேடைக்குள் நுழைந்து தேங்காயை எடுத்துச் செல்ல,
சண்டை நடக்கிறது. இக்காட்சிக்குப் பின் ‘இனி கதை நடக்கும்
விதம் காண்க’ என்ற அறிவிப்புடன் கதை தொடர்கிறது.
பாவையாட்டி, தானே பாடல்களைப் பாடாமல் பாவையை
இயக்குவதில் முழுக் கவனமும் செலுத்துவார். பின்னணியில்
பேசுவோரின் குரலை உள் வாங்கிக்கொண்டு பாவைகளை
இயக்குவார். ஆனால் இக்காலத்தில் பாவையாட்டியே
உரையாடலையும் நிகழ்த்துவதைக் காணலாம்.
3.6.2 தோற்பாவை நிழற்கூத்துமரப்பாவைக் கூத்துக்கும் தோற்பாவை நிழற்கூத்துக்கும்
பாவைகளில் தான் வேறுபாடே தவிர படைப்பு நிலையில் பெரிய
வேறுபாடு இல்லை. மதுரைப்பகுதியில் மட்டும் தோற்பாவை
நிழற்கூத்து அதிகமாக நடத்திக் காட்டப்படுகிறது.
- பெயர்க்காரணம்
தோலினால் செய்யப் பெற்ற பாவைகளின் நிழலை
மையப்படுத்தி அமைவதால் இப்பெயர் பெறுகிறது. தோலினால்
வடிவமைக்கப்பெற்ற பாவைகள் இக்கூத்திற்காகப்
பயன்படுத்தப்படுகின்றன.
- தோற்பாவைகளின் உருவாக்கமும் இயக்கமும்
இக்கூத்தில், நிகழ்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ள
கதையில் இடம் பெறும் பாத்திரங்களின் உருவங்கள் தோலில்
வரையப்படும். அவை உரிய அளவி்ல் வெட்டி எடுக்கப் பெற்று
வண்ணம் தீட்டப் பெறும். பாவைகளின் அனைத்துக்
கூறுகளையும் வேறுபடுத்திக் காட்ட வேண்டி மிகவும் கவனமாக
ஓவியங்கள் வரையப்படும். இவ்வகையில் உருவாக்கப்படும்
ஓவியப்பாவைகள் ஒளியினை ஊடுருவச் செய்ய வல்லவை.
குச்சியில் பொருத்தப்படும் பாவைகள் பாவையாட்டியின்
திறமையான செயல்பாட்டினால் இயக்கம் பெற்று, திரையில் நிழல்
வடிவங்களாகப் படிமம் கொள்ளும்.
- நிகழிடங்கள்
பெரும்பாலும் தமிழகத்தில் மதுரையையொட்டிய பகுதிகளில்
மட்டுமே விழாக்களில் இக்கூத்து இடம் பெறுகிறது. இஃது ஒரு
கூட்டுக் குடும்பக் கலையாக விளங்கி வருவதால் இதன்
பங்களிப்பு அருகியே காணப்படுகிறது.
- கதைகள்
மக்களுக்கு அறிமுகமான அரிச்சந்திரன், நல்லதங்காள்,
இராமாயணம் போன்ற கதைகள் தோற்பாவை நிழற்கூத்துக்காகக்
கொள்ளப்படுகின்றன. இவற்றில் இடம்பெறுகின்ற பாத்திரங்களை
நிழல்வடிவில் உயிரோட்டம் பெறச் செய்வதை இக்கூத்துக்
கலைஞர்கள் திறம்பட மேற்கொள்வர்.
- இசைக் கருவிகள்
சுதிப்பெட்டி, முகவீணை, சால்ரா போன்றன குறிப்பிடத்தக்க
இசைக் கருவிகளாகும்.
3.6.3 பாவைக்கூத்தின் பயன்பாடுபாவைக்கூத்துக் கலையானது உயிருள்ள நாடகத்தின் நிழல்
வடிவம் ஆகும். எனினும் இதன் மூலம் சொல்லப்படும்
செய்திகளும், வெளிப்படும் கலைக் கூறுகளும்
குறிப்பிடத்தக்கனவாகும்.
பாவைகளைப் பின்னாலிருந்து இயக்கும் கலைஞர்களின்
எண்ணங்கள் பாவைகள் வழியே வெளிப்படுகின்றன. பாவைகளை,
உயிருள்ள கதை மாந்தர்களாகவே பார்வையாளர்கள்
எண்ணுமளவிற்கு அவை படைத்தளிக்கப்படுவதால்
தனித்தன்மையுடன் விளங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில், மக்களுக்குத் தேவையான
கருத்துக்கள் பலவும் இக்கலை வடிவத்தின் மூலம் பிரச்சாரப்
படுத்தப்படுகின்றன. இவ்வகையில் மிகச் சிறந்த கருத்துப் பிரச்சார
ஊடகமாக பாவைக்கூத்துக்கலை விளங்குகிறது எனலாம்.