என்று காணப்படும் வாக்கியமும், தமிழ்
நெறிவிளக்கம் பொருளியலென்ற அதிகாரப் பெயரும்
இதற்கு முன் எழுத்தியலும் மொழியியலுமாகிய
இரண்டு பிரிவுகள் உண்டென்பதைப்
புலப்படுத்துகின்றன. பொருளியலிற்குப் பின்பு
யாப்பியலொன்றும் இருந்ததென்று கருத இடமுண்டு.
இப்பொருளியலும் அகம், புறம், அகப்புறமென்னும்
மூன்று பிரிவாக இருத்தல் வேண்டும்; இக்கருத்தை
முதற் சூத்திரம் தோற்றச் செய்கின்றது.
பொருளியலென்ற பொதுப்பெயரே இதன்கண் அகப்பொருள்,
புறப்பொரு ளென்னும் இரண்டுபகுதியேனும்
இருக்கவேண்டுமென்று நினைக்க ஆதாரமாகின்றது.
இப்பொழுது இந்நூலிற் கிடைப்பவை அகப்பொருளைப்
பற்றிக் கூறும் பகுதியாகிய 25 சூத்திரங்களே.
அவற்றுள்ளும், 25-வது சூத்திர உரையின்
பிற்பகுதி கிடைக்கவில்லை. இவ்விருபத்தைந்து
சூத்திரங்களில் இந்நூலாசிரியர் வகுத்துக் கொண்ட
அகப்பொருளிலக்கணம் முடிவுறுகின்றது.
தமிழிலக்கணங்களில் தொல்காப்பியம், அவிநயம்,
வீரசோழியம், இலக்கணவிளக்கம், தொன்னூல்
விளக்கமென்பன எழுத்து முதலிய இலக்கணப்
பகுதிகளனைத்தையும் பற்றிக் கூறுவன. அவற்றின்
வரிசையிலே ஒன்றாக இந்நூலும் சேர்த்து எண்ணத்
தகுவது. இந்நூலை இயற்றிய ஆசிரியரின் பெயரும்
வரலாறும் அறியக்கூடவில்லை.
தமிழிலக்கணத்தின் ஒவ்வொரு பகுதியும் நாளடைவில்
விரிவடையவே ஒவ்வொரு பகுதியிலும் பல நூல்கள்
உண்டாயின. இப்பொழுது அறியப்படும் இலக்கண
நூல்களுள் மிகப் பழையதாகிய அகத்தியம்
முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்தது. அவற்றில்
ஒன்றாகிய இயற்றமிழுக்குத் தொல்காப்பியம்
முதலியன இலக்கணம் வகுத்தன.
தொல்காப்பியத்திலுள்ள எழுத்து, சொல் என்னும்
இரண்டையும் தனியே விரித்துக் கூறும் நூல்கள்
சில பிற்காலத்தில் உண்டாயின. பொருளதிகாரத்திற்
கண்ட இலக்கணங்கள் அகப்பொருள், புறப்பொருள்,
யாப்பு, அணி, பாட்டியலென்று தனித்தனியாக
விரிந்து பல நூல்களிற் சொல்லப்பட்டன.
யாப்பிலக்கண நூல்கள் எவ்வளவோ இருந்தன வென்பதை
யாப்பருங்கலவிருத்தி யுரையால் உணரலாம். அகப்
பொருளிலக்கண