Primary tabs
தமிழிலக்கியத்தை இக்காலத்தார் பேரிலக்கியம் சிற்றிலக்கியம் என இரண்டாக வகுத்து வழங்குவர்; பெருங் காப்பியங்களும் சிறு காப்பியங்களும் முன் வகையினையும் அந்தாதி, உலா, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ் ஆகியன பின்வகையினையும் சாரும். சிற்றிலக்கியம் பிரபந்தங்கள் எனவும் வழங்கும். சங்ககாலத்தில் பிரபந்தங்கள் அதிகமாக இல்லை. பிற்காலத்தே தோன்றி நாளடைவில் அவை வளர்ச்சியுற்றன. பிரபந்தங்கள் தொண்ணூற்றாறு என்ற கொள்கை ஒரு காலத்தில் நிலவிவந்தது. இப்பொழுது அவற்றின் தொகை அந்த எண்ணைக் கடந்து நிற்கின்றது. அண்டகோசம், ஆடாமணி, ஆண்கூடல், இலக்குமி விலாசம், களவு கண்ணி, கன்னி மயக்கம், காமரச மாலை, கான வேட்டம், சிந்துமோகினி, சிலேடா சாகரம், தளசிங்காரம், தாமரை நோன்பு, துனி விசித்திரம், நொண்டி நாடகம், பண்ணை விசித்திரம், புறநாட்டுச் செய்கை, மதன சிங்காரம், வதன சந்திரோதயம், விசய வித்தாரம், வேடர் விநோதம் முதலியன தொண்ணூற்றாறு பிரபந்தங்களில் அடங்காதவையாகும்.
பெரும்பாலும் கடவுளரையோ, அரசர் பிரபுக்கள் ஞானாசாரியர் வள்ளல்கள் புலவர்கள் முதலிய மானிடரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இவ்வித நூல்கள் புலவர் பெருமக்களால் இயற்றப்பெற்றன.
இலக்கியம் ஒன்று தோன்றியபின் அதற்கு இலக்கணம் அமைவது இயல்பாதலால் பிரபந்தங்கள் தோன்றியபின் அவற்றின் இலக்கணங்களை விளக்கும் நூல்கள் எழுந்தன. இவ்வித நூல்களே பாட்டியல்கள் ஆகும். பாட்டு என்பது இ்ங்கே ஆகுபெயர்; அது செய்யுளைக் குறிக்காமல் செய்யுட்களால் ஆன நூலைக் குறிக்கும். இயல் என்பது இலக்கணம். எனவே, பாட்டியல் என்பது பிரபந்த இலக்கணமாகும்.
செய்யுளிலக்கணத்தைக் கூறும் நூல்கள் வேறு, பாட்டியல்கள்
வேறு.
முன்னவை செய்யுளின் உறுப்புகளாகிய எழுத்து, அசை, சீர், தளை
முதலியவற்றையும் பாக்களையும்