தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

உலோச்சனார்


உலோச்சனார்

11. நெய்தல்
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
5
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே;
புணரி பொருத பூ மணல் அடைகரை,
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே.
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்

38. நெய்தல்
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
5
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
பெண்ணை இவரும் ஆங்கண்
10
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே.
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்

63. நெய்தல்
உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
5
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால்,
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப,
பசலை ஆகி விளிவதுகொல்லோ-
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
10
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-உலோச்சனார்

64. குறிஞ்சி
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல்-தோழி!-யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
5
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
10
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.- உலோச்சனார்

74. நெய்தல்
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
5
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
10
கண்டல் வேலிய ஊர், 'அவன்
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்

131. நெய்தல்
ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ-உயர் மணற் சேர்ப்ப!
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
5
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய,
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?
மணமனையில் பிற்றை ஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது.-உலோச்சனார்

149. நெய்தல்
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி,
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி,
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற,
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப,
5
அலந்தனென் வாழி-தோழி!-கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ,
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால், யானே;
10
அலர் சுமந்து ஒழிக, இவ் அழுங்கல் ஊரே!
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்

191. நெய்தல்
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து,
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
5
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி,
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
10
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து, அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்

203. நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
5
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு,
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
10
செய்த தன் தப்பல் அன்றியும்,
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்

223. நெய்தல்
இவள்தன், காமம் பெருமையின், காலை என்னாள்; நின்
அன்பு பெரிது உடைமையின், அளித்தல் வேண்டி,
பகலும் வருதி, பல் பூங் கானல்;
இன்னீர்ஆகலோ இனிதால் எனின், இவள்
5
அலரின் அருங் கடிப் படுகுவள்; அதனால்
எல்லி வம்மோ!-மெல்லம் புலம்ப!
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து, இவ் அம்பல் ஊரே.
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி நேர்வாள் போன்று, அதுவும் மறுத்து, வரைவு கடாயது.-உலோச்சனார்

249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
5
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
10
அம்பல் மூதூர் அலர் எழ,
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?
வரைவிடை மெலிந்தது.-உலோச்சனார்

254. நெய்தல்
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,
துனி இல் நல்மொழி இனிய கூறியும்,
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்
5
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப!
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த, நீலக்
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை-
10
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி,
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்

278. நெய்தல்
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
5
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்-
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே.
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்

287. நெய்தல்
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம்' என்னும்
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப்
5
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை-
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
10
'தேர் மணித் தெள் இசைகொல்?' என,
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்

311. நெய்தல்
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
5
அழியா மரபின் நம் மூதூர் நன்றே-
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
10
இருங் களிப் பிரசம் ஊத, அவர்
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்

331. நெய்தல்
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை,
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி,
5
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி,
'எந்தை திமில், இது, நுந்தை திமில்' என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப!
இனிதேதெய்ய, எம் முனிவு இல் நல் ஊர்;
10
இனி, வரின் தவறும் இல்லை: எனையதூஉம்
பிறர் பிறர் அறிதல் யாவது-
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே.
தோழி இரவுக்குறி நேர்ந்தது.-உலோச்சனார்

354. நெய்தல்
தான் அது பொறுத்தல் யாவது-கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,
5
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
10
அளம் போகு ஆகுலம் கடுப்ப,
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே?
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்

363. நெய்தல்
'கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்' என
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
5
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ-தோழி!-மலி நீர்ச் சேர்ப்ப-
பைந் தழை சிதைய, கோதை வாட,
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ,
10
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே.
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, 'தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி' எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத

372. நெய்தல்
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,
5
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி,
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு
10
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து,
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே.
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்

378. நெய்தல்
யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;
5
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும்,
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட,
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,
10
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி,
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:17:12(இந்திய நேரம்)