தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


ஓரி

6. குறிஞ்சி
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு
5
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
10
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்

52. பாலை
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
5
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்;
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
10
கை வளம் இயைவது ஆயினும்,
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே.
தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்

265. குறிஞ்சி
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்
5
பாரத்து அன்ன-ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன-
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.
பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.- பரணர்

320. மருதம்
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்-
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்
5
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,
காரி புக்க நேரார் புலம்போல்,
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
10
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே.
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:35:04(இந்திய நேரம்)