தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

351-360

351-360

351
அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய்,
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி
பல் இதழ் உண்கண் மடந்தை! நின்
5
நல் எழில் அல்குல் வாடிய நிலையே.
பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1

352
விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும்
வெஞ் சுரம் 'அரிய' என்னார்,
5
வந்தனர் தோழி! நம் காதலோரே!
இதுவும் அது. 2

353
எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச்
சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க, வந்தனர்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
இதுவும் அது. 3

354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே
தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே.
இதுவும் அது. 4

355
திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி,
'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச்
சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச்
சிறு கண் யானை திரிதரும்
5
நெறி விலங்கு அதர கானத்தானே.
நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5

356
உள்ளுதற்கு இனியமன்ற செல்வர்
யானை பிணித்த பொன் புனை கயிற்றின்,
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்க, தந்த நின் குணனே.
வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6

357
குரவம் மலர, மரவம் பூப்ப,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ,
'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின்
அம் கலிழ் மாமை கவின
5
வந்தனர் தோழி! நம் காதலோரே.
பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7

358
கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும்,
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து,
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி,
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே?
தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாகத் தோழி சொல்லியது. 8

359
அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து,
பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவ நனி நெடிய ஆயின; இனியே,
அணியிழை உள்ளி யாம் வருதலின்
5
நணிய ஆயின சுரத்திடை ஆறே.
மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும், வருகின்ற காலத்து அதன் அணிமையும், கூறியது. 9

360
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
அரிய ஆயினும், எளிய அன்றே
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி,
கடு மான் திண் தேர் கடைஇ,
5
நெடு மான் நோக்கி! நின் உள்ளி யாம் வரவே!
வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன், 'சுரத்து அருமை நோக்காது வந்தவாறு என்னை?' என வினவிய தலைமகட்குச் சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:54:44(இந்திய நேரம்)