தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தானை மறம்

தானை மறம்
87
களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.
திணை தும்பை; துறை தானை மறம்.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

88
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல்
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்,
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்
5
விழவு மேம்பட்ட நல் போர்
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

89
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
5
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின்,
'அது போர்' என்னும் என்னையும் உளனே.
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

90
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்,
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
5
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
10
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை
வழு இல் வன் கை, மழவர் பெரும!
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?
திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

170
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி,
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர்,
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
5
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப,
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே
10
சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து,
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல்
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
15
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே.
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

294
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர,
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை,
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து,
5
இறையும் பெயரும் தோற்றி, நுமருள்
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என,
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே.
திணை தும்பை; துறை தானைமறம்.
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

300
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி,
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
5
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயில் தேருமால் நின்னே.
திணை தும்பை; துறை தானை மறம்.
அரிசில் கிழார் பாடியது.

301
பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய,
அமரின் இட்ட அரு முள் வேலிக்
கல்லென் பாசறைப் பல் சான்றீரே!
5
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்;
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்;
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால்
10
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே?
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண்
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி,
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி,
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென
15
வேந்து ஊர் யானைக்கு அல்லது,
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே.
திணையும் துறையும் அவை.
ஆவூர் மூலங் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:20:02(இந்திய நேரம்)