தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

முன்னுரை




முன்னுரை

இந்நாளைத் தமிழகத்துக்குப் புறநானூறு என்னும் இந்நூல், புது நூல்
அன்று; இது, காலஞ்சென்ற டாக்டர் திரு. உ. வே. சாமிநாதைய ரவர்களால்
சென்ற ஐம்பது ஆண்டுகட்கு முன்பே அச்சேற்றி வெளியிடப்பெற்றது;
தமிழர்களின் பண்டை நாகரிகத்தை ஆராய்ந்த ஆராய்ச்சி யறிஞர் பலரும்
கண்டறிந்தது; மேலைநாட்டுத் தமிழ்ப்புலவரான மறைத்திரு. ஜி.யூ. போப்
முதலியோர்களால் சில பாட்டுக்கள் மொழிபெயர்த்து ஆங்கிலத்திற்
காட்டப்பெற்றது.

அரசியல் சமுதாயம் சமயம் முதலிய வாழ்க்கைத் துறைகளில் உழைக்கும்
அறிஞர் பலரும் இந் நூலின் செய்யுட்களுட் பலவற்றைப் பயன்கொண்டுள்ளனர்;
கருத்துக்களை மேற்கொண்டுள்ளனர். இப்போது சென்னை மாநில அரசியல்
முதலமைச்சர் உணவுநிலைபற்றிப் பேச்சு நிகழ்த்த வேண்டியிருந்த காலையில்,
இப் புறநானூறு ஒருசில கருத்துக்களை அவர்க்கு வழங்கிச் சிறப்பளித்தது.

தென்குமரியின் தெற்கிலுள்ள இந்துமாக்கடல் தோன்றுதற்குமுன் தோன்றிய
செய்யுட்களும், அது தோன்றியபின் பாரத இராமாயண நிகழ்ச்சிகட்கு முன்னும்
பின்னும் தோன்றிய செய்யுட்களும் திருவேங்கடத்தில் திருமால் கோயிலும்,
பழனியில் முருகன் கோயிலும், இராமேச்சுரத்தில் இராமலிங்கர் கோயிலும்
தோன்றுதற்குமுன் தோன்றிய செய்யுட்களும், சிலம்பு பாடிய இளங்கோவடிகளும்,
மணிமேகலை பாடிய சாத்தனாரும் தோன்றுதற்கு முன்னும் பின்னும் தோன்றிய
செய்யுட்களும் இப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. சுருங்கச்
சொல்லுமிடத்து, மிகப் பழைய நூல்க ளெல்லாவற்றிற்கும் பழைய தெனக்
கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னே தோன்றிய செய்யுட்களும் பின்
தோன்றிய செய்யுட்களும் தன்னகத்தே கொண்டு, தமிழ் நாகரிகத்தின்
தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது இப்புறநானூறு என்பது
மிகையாகாது.

இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, நம் தமிழகத்தில் விளங்கிய
புலவர் பெருமக்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பாக
விளங்கும் இத் தொகை நூல், தொல்காப்பியப் புறத்திணையியலில்
அடங்கியுள்ளபுறத்துறைகட் கேற்ப, திணையும் துறையும் வகுக்கப் பெற்றுப்
புறத்துறையிலக்கணத்துக்குச் சீர்த்த இலக்கியமாகவும் இலங்குகிறது. ‘‘மக்கள்,
தமது வாழ்விடை எண்ணும் எண்ணங்களும், சொல்லும் சொற்களும் இயற்கை
இலக்கண வரம்புக்குட்பட்டு இயலுவன; இவ்விலக்கணத்தோடு ஒட்டிய
இயற்கைமொழி இலக்கணம் தமிழ்மொழியின் தொல்லிலக்கணம்’’ என
மொழிநூலறிஞர் உரைப்பதற்கேற்பவே,இந்நூற்கண் காணப்படும் எண்ணங்களும்
சொற்களும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் பெற்றுத்
திகழ்கின்றன. மேலும், இவ் விலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும்
பண்டைத் தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும், சீரிய நாகரிகப்
பண்பாட்டையும் நல்லறிஞர் நன்கு தெளிய விளக்கி நிற்கின்றன.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:30:24(இந்திய நேரம்)