Primary tabs
(இ-ள்.) உறுபொருள் நிலைமை தன்னை - (அறிதற்கு) உற்ற உயிர் முதலிய பொருள்களின் நிலைமையினை, உற்று உணர்வு -உள்ளவாறு உணர்தல், அறிவு ஆகும் - நன்ஞானம் ஆகும்: அறிபொருள் அதனின் - அறிந்த அப்பொருள்களின். தூய்மை - தூய தன்மையில் (உண்மைத் தன்மையில்), அகத்து எழும் - மனத்தில் தோன்றும், தெளிவு - --, காட்சி - நற்காட்சியாகும்: நறுமலர் பிண்டி நாதன் -வாசனையுள்ள மலரையுடைய பிண்டியின் கீழமரும் ஆதிபகவன் அருளிய, நல்அறப் பெருமை தன்மேல்இறுகிய மகிழ்ச்சி - சிறந்த அறிவு காட்சி இரண்டின் சீர்மையிலும் முதிர்ந்த மகிழ்வுடன் பொருந்திநிற்றல், இதனது பிரிவும் ஆகும் - இறைவனருளிய அறத்தின் பிரிவாகிய ஒழுக்கமும் ஆகும், என்றான் - என்று கூறினார். (எ-று.)
அறிவது ஞானம், அதனைத் தெளிவது தரிசனம், ஞான தரிசனமே நல்லறம்: அவ்வறத்தில் மிகுந்த மகிழ்வோடு நிற்றல் ஒழுக்கம் என்றாரென்க.
இதுவும் முன்வருஞ் செய்யுளும் ஒரு தொடர். தூய்மை - குற்றம் இல்லாத தன்மை. தெளிவு - தெளிதல்: நம்புதல். உள்பொருளிதுவென வுணர்தல் ஞானமாம், தெள்ளிதி னப்பொருள் தெளிதல் காட்சியாம், விள்வற விருமையும் விளங்கத் தன்னுளே, ஒள்ளிதிற் றரித்தலையொழுக்க மென்பவே‘ (சீவக: 2845) ‘ உரைத்தவிப் பொருளின் மெய்ம்மை யுணர்வது நல்ல ஞானம், புரைப்பறத்தெளிதல் காட்சி பொருந்திய விரண்டு மொன்றிற், றரித்தல் நல் லொழுக்கமாகும்‘ (மேரு, 107). இச்செய்யுட்கள் ஈண்டு ஒப்புநோக்கற் பாலன.
பிண்டி - அசோகு: இது இறைவன்சிறப்புவகைகளுள் ஒன்று.
1 தன்பால்.