தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


முன்னுரை

யசோதர காவியம் என்னும் இக்காப்பியம் தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றென்று1 கூறுவர். இது, விருத்தப் பாக்களா லாகியது.  இந்நூல், நான்கு சருக்கங்களையும், 320 செய்யுட்களையும் உடையது.  ஆயின், இதன் பதிப்புகளில் இந்நூல் ஐந்து சருக்கமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  எனக்குக் கிடைத்த ஏடுகளில் நான்கு சருக்கமாகவே காணப்படுதலாலும்,  இதன் முதல் நூலில் நான்குசருக்கங்களே இருத்தலாலும், அடியேன் நான்கு சருக்கங்களாகவே கொண்டுள்ளேன்.

இந் நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.  இது வடமொழியில் வாதிராஜ ரியற்றி யுள்ள யசோதர சரிதத்தின் மொழிபெயர்ப்பு என்று தெரிகின்றது; ஆதலின், இதன் ஆசிரியர் வடமொழியிலும் சிறந்த புலமை யுடையவர் என்பது போதரும்.

இந்நூல், பிராணிகளின் வடிவாகச் செய்யப்பட்டபொருள்களைக் கொன்றாலும், ‘நாமஸ்தாபனம்’ (பெயர்நாட்டல்) காரணமாக மனத்தாற் கருதிச் செய்யும் அதுவும் உயிர்க்கொலையே யாகலின், அதனால் பல பிறப்புக்களிலும் துன்பம் உண்டாகும் என்னும் உண்மையை முக்கியமாகக் கொண்டது; சமயக்கொள்கைகளையும் அறவுரைகளையும் ஆங்காங்கு இயைபுறக் கூறித் கற்போர்க்கு நல்லறிவினை உண்டாக்குவது.

இக்காப்பியத் தலைவனாகிய யசோதரன் தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வருள் இருபதாமவராகிய முனிசுவ்ரததீர்த்தங்கரர் காலத்தவன் என்று இந்நூல் கூறுகின்றது. ‘ஹரிபத்ரனுடைய “ஸமா இச்சாகஹா”  விலிருந்து நாம் இயல்பாகவே அறிந்திருக்கிற யசோதர ராஜனுடைய கதையானது வாதிராஜஸூரியினால் யசோதா சரிதம் என்ற நாலு

 

1
ஏனைய நான்காவன; சூளாமணி, உதயனகுமார காவியம்,
நாககுமார காவியம்,  நீலகேசித்தெருட்டு என்ப.

 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:38:45(இந்திய நேரம்)