தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

“ஓருலகோ? வொருதிசையோ? வொருபதியோ? தம்மி

லொருமரபோ? வொருபெயரோ? வொருகாலந் தானோ?

பேருலகி லொருமைநெறி தருங்கதையோ? பன்மைப்

பெருங்கதையோ? பேரொன்றோ? வல்லவே! யிதனை

யே“ருலகெ லாமுணர்ந்தோ தற்கரிய வன்' னென்

றிறைவன்முத லடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு,

பாருலகி னாமகணின் றெடுத்துக்கை நீட்டப்

பாடிமுடித் தனர்தொண்டர் சீர்பரவ வல்லார்“

“கருங்கடலைக் கைநீத்துக் கொளலெளிது; முந்நீர்க்

கடற்கரையி னொய்மணலை யெண்ணியள விடலாம்;

பெருங்கடன்மேல் வருந்திரையை யொன்றிரண்டென் றெண்ணிப்

பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிட லாகுந்;

தருங்கடலின் மீனையள விடலாகும்; வானத்

தாரகையை யளவிடலாஞ் சங்கரன்றா டமது

சிரங்கொடிருத் தொண்டர்புரா ணத்தையள விடநஞ்

சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கு மரிதே“

என்று வியந்து பாராட்டிக் காட்டினர் என்றால் அதன் பெருமையை யாமோ
அளந்து காணவல்லோம்? இவ்வாறு பாடிய புராணத்தை இரண்டு
காண்டங்களாகவும் பதின்மூன்று சருக்கங்களாகவும் வகுத்துத், தெய்வம்
மணக்கும் நாலாயிரத்து இருநூற்றைம்பத்துமூன்று செய்யுட்களாற் பாடி
முடித்து, அதற்குத் திருத்தொண்டர் புராணமென்று பேரிட்டு, அப்புராணத்
திருவேட்டினை மைக்காப் பணிந்து, கவளிகையுமிட்டு நிறைவு செய்தருளினர்
ஆசிரியர்.

அருண்மொழியார் புராணம் பாடத் தில்லைக்குச் சென்றபின் அரசர்
பல காலமும் ‘புராணம் எவ்வளவு சென்றது? எவ்வளவு சென்றது? என்று
தூதுவர்களையும் ஒற்றர்களையும் அனுப்பித் தெரிந்து வந்தனர். புராண
நிறைவெய்திய செய்தி கேட்டனர். அது சொல்லியவர்க்கெல்லாம்
செம்பொன்னும் நவமணியுஞ் செழுந்துகிலும் முதலான வரிசைகள் சிறப்புறப்
பொழிந்தனர்; “தில்லையம்பல வாணரது திருக்கூத்துக் கும்பிட்டு அவர்
அருண்மொழி முதலெடுத்துத் தரப்பெற்ற அருண்மொழியாரையும், அம்முதல்
கொண்டு அவர் வாய்மலர்ந்த புராணத்தையும் தொழுவேன் யான்“ என்று
துணிந்தனர்; “யாவரும் பயணம் எழுக“ என்று முரசறைவித்தனர்;
நல்வேளையிற் றாமும் சேனைகள் சூழப்புறப் பட்டனர். அவர் வரவு
கேட்ட தில்லை வாழந்தணர்களும், மடபதிகளும், மற்றும் பெரியோர்களும்,
அருண்மொழியாரும் மகிழ்ந்து அரசரை எதிர்கொண்டு இனிய மொழி பல
பகர்ந்து வரவேற்றனர்.

“முண்ட மானதிரு முடியு மிட்டதிரு முண்ட முங்கவச முந்துணைக்
குண்ட லங்களு மிரண்டு காதினும் வடிந்த லைந்தகுழை யுந்திருக்
கண்ட மாலைகர மாலை யுஞ்சிரசு மாலை யுங்கவின் விளங்கவே
தொண்டர் சீர்பரவு வான ணைந்தசுப சரிதை சோழனெதிர்
                   கண்டனன்“

அரசர் அருண்மொழியாரைத் தவவேடத் தரசராகக் கண்டு
அத்திருவேடத்தினையும் அம்பலவர் அருளையும் நினைந்து அவரது
திருவடிகளில் வீழ்ந்திறைஞ்சினார். பின்பு அரசர், யாவரும் சூழத்
திருச்சிற்றம்பலவாணர் திருமுன்பு சென்று, கண்ணருவிபாய உரோமம்
புளகிப்ப, வாய்குழற, அன்பினாலே விம்மிவிம்மி, ஆனந்த பரவசராகி,
வீழ்ந்து, எழுந்து, நின்றனர். அப்போது “சேக்கிழான் நமது தொண்டர்சீர்
பரவுதற்கு நாமே “உலகெலாம்“ என்று அடியெடுத்துக் கொடுக்க வரைந்து
நூல்செய்து முடித்தனன் வளவ! நீ இதை விரைந்து கேள்“ என்று
கனகசபையில் இறைவனுடைய அசரீரி வாக்கு யாவருங் கேட்க எழுந்தது.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 13:25:47(இந்திய நேரம்)