தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இரண்டாவது பாடலாகிய ‘பிரதிக்ஞை’ கவிஞர் பாரதிக்கு வாழ்நாள் காலத்தில்
இருந்த இருட்டடிப்பைக் கூறி, அவரைப் புதுயுகக் கவிஞராக வரவேற்கிறது. 
பாரதிக்கு இருந்த இதே இருட்டடிப்பு பாரதிதாசனுக்கும் தமிழ் ஒளிக்கும்
தொடர்கின்றன.

ஆனால், எல்லா முற்போக்கு இயக்கங்களிலும் ஏற்படும் தயக்கங்கள் 
இத்தகைய வாய்ப்பை முதலாளித்துவத் தலைவர்களுக்கு அளித்துவிடுகின்றன.

“அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்ற
பழமொழிப்படி முதலாளித்துவத் தலைமையின் ஆற்றலைவிடத் தமிழ்ஒளி 
போன்ற கவிஞர்களின் ஆற்றல் பன்மடங்குப் பெரிதாகும். ஒரு சமதர்ம 
இந்தியாவும், ஒரு சமதர்ம தமிழகமும் அமையும் காலம் தொலை தூரத்தில் 
இல்லை. அது அமையும்போது கவிஞர் தமிழ் ஒளி உலகத்தில் முன்னணிக்
கவிஞருள் ஒருவராகக் கட்டாயம் இடம் பெறுவார்.

இந்தத் தொகுப்பின் மற்ற பகுதிகள், தமிழ்ச் சமுதாயத்தில் அவர்
வாழ்நாட்களில் ஏற்பட்ட போராட்ட வெற்றி நிகழ்ச்சிகளைச் சாவாப் 
பாடல்களாகப் பாடியுள்ளன.

தேசியக்கவி பாரதியார் உருஷ்யப் புரட்சியையும், ஐரோப்பிய நாடுகளின்
விடுதலைச் சூழல்களையும் முதன் முதலில் பாடிச் சிறப்பித்ததுபோல, ‘வண்ணப்’
புரட்சிக் கவிஞர் தமிழ் ஒளி, சீனத்தின் புரட்சியையும், ஆசிய நாடுகளின் 
விடுதலைச் சூழல்களையும் தனது ஒப்புயர்வற்ற பாடல்களால் சிறப்பித்துள்ளார்.
இது அவரது தலைசிறந்த பெருமையாகும்.

தமிழகத்தில் அது நன்கு பரவும்படி தோழர் செ.து. சஞ்சீவி அவர்கள்,
கவிதைகளைப் பண்பு வாரியாகத் தொகுத்து வெளியிடுகிறார்.

‘மக்கள் கவிதைகள்’ என்ற அவ்வேட்டுக்கு தமிழ் மாணவர் உலகும், புலவர்
உலகும் மக்களும் பேராதரவு வழங்குவது வருங்காலத் தமிழகத்திற்கு வளந்தரும்
செயலாகும் என்று மனமார நம்புகின்றேன்.

தமிழகம் இந்தத் தொகுப்புக்குப் பேராதரவு காட்ட வேண்டும் என்றும் நான்
விரும்புகின்றேன்.

3.1.1988 
சென்னை

கா. அப்பாத்துரை


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 10:39:16(இந்திய நேரம்)