Primary tabs
அத்திமரம் குத்தகையாம்,
ஐந்து லட்சம் சம்பளமாம்,
சாமத்தலை முழுக்கமாம், உங்களப்பாவுக்கு
சர்க்கார் உத்தியோகமாம்
நாலு தலை வாசல் நல்ல பெரும்பாதை
பெரும்பாதை மேலிருந்து துரோபதை
பெரும் பூசை கொண்டாளோ,
செங்கல் அறுத்து துரோபதைக்கு
சிமிழ் போல் வீடுகட்டி
பாக்கு மரமறுத்து துரோபதைக்கு
பல்லக்கலங்காரிச்சு
பொன்னிலும் தங்கமோ,
பூவிலும் அதிமணமோ!
முன் ராசாக்கள் நீ
முடிக்கும் பரிமளமோ!
நாரிக்கு அழுதவனோ! நீ
ராஜயோகம் கேட்டவனோ!
தூரிக்கு அழுதவனோ! நீ
சொக்கர் தவம் கேட்டவனோ!
ராரிக்கோ, ராரி மெத்தை, நீ
இராமருக்கோ பஞ்சு மெத்தை
என் ஐயா! நீ பஞ்சு மெத்தை
மேலிருந்து பஞ்சாங்கம் கேட்டவனோ!
என்னரசன் என் கண்ணுக்கு
இசைந்த புருவத்துக்கோ,
தங்கப் பூக் கண்ணாடி
சமைத்து வாரும் ஆசாரி,
வண்டாடும் பட்சி,
மலரும் இருவாட்சி,
கொண்டாடிச் சூடுங்க,
கோலத் திரு முடிக்கு
கொல்லையிலே முல்லை,
கொடி யோடிப் பூக்குது
கொண்டைக்கு இசைந்த முல்லை
கொண்டு வாரும் பண்டாரம்!
வட்டார வழக்கு : நான் பெத்தான்-நான் பெற்றவன்
சேகரித்தவர்:
P. சொர்ணம்
இடம்:
சிவகிரி,
நெல்லை மாவட்டம்.