தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


புளிய இலை போல
புள்ளித் தேமல் விழுந்தவரே
அணை வாரு மில்லாமல்
அழியுதையா உங்க தேமல்

ஏடு படிச்ச வரை
எழுத்தாணி தொட்டவரை
பாரதம் படிச்சவரை
பார்த்து வெகு நாளாச்சி

முன்னங்கையில் தங்கக் காப்பு
முகம் நெறஞ்ச அருப்பக்கட்டு
காதவழி வந்தாலும்
கைவீச்சில் நானறிவேன்

அச்சடிப் புத்தகமே
அரும் பரும்பாப் பேனாக் குச்சி
பேனாக் குச்சி தொட்டெழுதும்
பேர்ப் போன என் சாமி

பல்லிலே இடை காவி
பணத்திலே செலவாளி
மேவரத்து நெல்லளக்க
மெத்தச் செலவாளி

ஒரு பாகம் தலைமுடியாம்
ஒதுக்கி விட்ட புருவக் கட்டாம்
புருவக் கட்டை நேர் பார்த்து
பூசுமையா திரு நீற்றை

இரும்படிச்சா கல கலங்கும்
ஏலந் திண்ண வாய் மணக்கும்
கரும்பு திண்ண வாயினிக்கும்
கண்ணாளன் தந்த ஆசை

ஈனாத வாழை போல
இளவாழைக் கண்ணு போல
காலையிலே காங்கலைண்ணா
கண்ணு ரெண்டும் சோருதையா



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:13:15(இந்திய நேரம்)