Primary tabs
ஒன்றாம் வயதில்
ஒக்கப் பணி பூண்டு
இரண்டாம் வயதில்
ரத்ன மணி ஊஞ்சலிட்டு
மூன்றாம் வயதில்
முத்தால லங்கரித்து
நான்காம் வயதில்
நடக்கப் பணி பூண்டு
பத்துப் படித்துப்
பரீட்சை எல்லாம் தான் எழுதி
பாண்டித் துரைராசா
பகல் உண்டு கைகழுவி
தாம் பூலம் தரித்து
சகுனம் பார்த்து சைக்கிளேறி
கச்சேரி போயி
கமலப்பூப் பாண்டியரும்
கோர்ட்டாரு எதிரில்
குரிச்சி மேல் உட்கார்ந்து
ஜட்ஜு துரைகளுடன்
சரிவழக்குப் பேசையிலே
புத்தகமும் கையுமாய்
பேச்சுரைக்கும் வேளையிலே
கண்டு மகிழ்ந்தார்கள் எங்க
கமலப்பூ ராசாவை
பார்த்து மகிழ்ந்தார்கள் எங்க
பாண்டித் துரைராசாவை
பெண்ணுக் கிசைந்த
புண்ணியர்தான் என்று சொல்லி
கன்னிக் கிசைந்த
கணவர்தான் என்று சொல்லி
மங்கைக் கிசைந்த
மணவாளர் என்று சொல்லி
நங்கைக் கிசைந்த
நாயகர்தான் என்று சொல்லி
வலிய அவர் பேசி
வந்தார் வரிசையுடன்
பெரிய இடந்தானென்று
பெண் தாரேன் என்று வந்தார்
வாருங்கள் என்றார் எங்கள் அப்பா
வரிசை மிகவுடையார்