xxiv
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
பாவாணரின் மொழிக் கோட்பாடு தமிழ்
திராவிடத்திற்குத் தாய், ஆரியத்திற்கு மூலம்,
ஞாலமுதன்மொழி என்னும் முப்பெருந் தன்மைகளுடன்
விளங்குகின்றது. அவரது மொழிப்பாகுபாடு
மொழிகளை இயன்மொழி என்றும் திரிமொழி என்றும்
பிரிக்கிறது. இயல்பாகத் தோன்றிய மொழி
இயன்மொழி. இயன்மொழியிலிருந்து திரிந்தது
திரிமொழி. இயல்பாகத் தோன்றியதாதலின் தமிழ்
இயன்மொழி. பிற திரிமொழிகள். சில திரிபில்
திரிமொழிகள். இவ்வடிப்படையிலேயே வண்ணனை
மொழியியலின் வழுக்களாக இருபஃதும், நெறிமுறைத்
தவறுகளாகப் பன்னிரண்டும், வண்ணனை மொழியியலால்
விளைந்தனவாக நான்கும் என வகைப்படுத்திக்
காட்டியுள்ளார் பாவாணர். இவற்றுள் நெறிமுறைத்
தவற்றினால் நிகழ்ந்தன. சில; தனியரின்
தவற்றினால் நிகழ்ந்தன சில.
வழுக்களைத் தெளிவாகக் காட்டும் முகத்தான்
மொழிநூல், மொழிநூல் முதன்மை, தமிழின் தொன்மை,
வளமை போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார்.
இவற்றின் பின்னணியில் பார்த்தால்தான் அவர்
சுட்டிய வழுக்களின் தன்மைகள் விளங்கும்.
அவ்வடிப் படையில் இவ் விளக்கங்கள் மிகவும்
இன்றியமையாதன.
மொழிபற்றிய ஆய்வு பழங்காலந்தொட்டு இருந்து
வந்திருக்கிறது. தொல்காப்பியம் போன்ற
இலக்கணம் உருவாகியுள்ளமை மொழியியல் ஆய்வு
சிறந்து விளங்கி இருந்தமையைக் காட்டும். இதே
போல் கிரேக்கம் போன்ற மொழிகளிலும்
பழங்காலத்தில் மொழியாய்வு நடந்து
வந்திருக்கிறது. இருந்தாலும் 18-ஆம்
நூற்றாண்டு முதல் மொழியை அறிவியல்
அடிப்படையில் ஆராய்வது நடந்துவருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய - ஐரோப்பிய மொழிக்
குடும்பத்தில்தான் மிகுதியான ஆய்வுகள்
நடந்துள்ளன. மொழியியல் மிக நுட்பமாக மொழியை
ஆராய்கிறது. இருந்தாலும் இதில் சில
விதிவிலக்குகளும் இருந்து வருகின்றன.
மொழியியல் ஆய்வின் மூலம் பெறப்பட்ட முடிபுகள்
இன்னும் நம் கல்வித்திட்டத்தில்
இடம்பெறவில்லை என்பன போன்ற காரணங்களைக்
காட்டி மொழியைப்பற்றி ஆராயும் மொழியியல் தன்
தொடக்க நிலையிலேயே இருக்கிறது என்று
குறிப்பிடுவார் மொழிநூல் மூதறிஞர்
புளூம்பீல்டு (1935).
திராவிட மொழியியல் இன்று நல்ல வளர்ச்சியைக்
கண்டுள்ளது. இக்குடும்ப மொழிகளைப் பற்றி
தெளிவான கருத்தைத் தந்தவர் கால்டுவெல்
பெருமகனார். இருந்தாலும் அவரது திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) வெளிவந்து
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திராவிட
மொழியியல் ஆய்வு மிகச்சிறிய அளவிலேயே
தொடரப்பட்டது.
இக் காலகட்டத்தில்தான் பாவாணரது மொழியியல்
ஆய்வு தொடங்குகிறது. பாவாணரின் மொழிநூல்
ஆய்விற்குத் தூண்டுகோலாக இருந்தவற்றுள்
கால்டுவெல்லின் திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணமும் ஒன்றாகும். திராவிடத்தாய்,
ஒப்பியன் மொழிநூல், வேர்ச்சொற் கட்டுரைகள்,