Primary tabs
இஈசுவரவடிவுஅகம் - குழித்தலை,
பதிப்புரை
தமிழரையும் தமிழகத்தையும் பற்றிய* வரலாற்று நூலை முதலில் எழுதியவர் பேரறிஞர் பி. கனகசபைப் பிள்ளையாவர். அக்காலம் முதல் (1898) தமிழ் நாட்டின் பண்டைவரலாற்றினை அறியும் ஆர்வம் தமிழறிஞர் உள்ளத்தில் கிளர்வதாயிற்று. ஆகவே, தமிழகத்தைக் குறித்து எழுதப்படும் நூல்களும் பொருளுரைகளும் அவர்களாற் போற்றிப் பயிலப்படலாயின. தமிழ் மொழியில் இஞ்ஞான்று கிடைக்கப்பெறும் பழந்தமிழ் நூல்களிற் பெரும்பாலன கி. மு. 300க்குப் பிற்பட்டன என்று கருதப்படுகின்றன. ஆகவே, அவைகளைத் துணைகொண்டு தமிழகத்தின் மிகப் பண்டைய வரலாறுகளை அறிதல் இயல்வதன்று. எனவே நிலநூல், மொழி நூல், மக்கட் குலநூல், மனிதநூல், பழம் பொருள் ஆராய்ச்சி நூல், உலக மக்களின் பழைய வரலாற்று நூல்கள் முதலியவற்றிலேயே தமிழகத்தின் பண்டைய வரலாற்றுக்கு வேண்டும் அடிப்படைச் சான்றுகளைக் காணுதல் வேண்டும். இவ்வழியைப் பின்பற்றி மேல்நாட்டாசிரியர்களிற் சிலர் தமிழரைப்பற்றி ஆராய்ந்து கூறியுள்ளார்கள்,
"ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்" காலம் முதல் இன்றுவரையில் தமிழகத்தைப்பற்றி எவ்வளவு அறியப்பட்டுள்ளனவோ அவையிற்றை எல்லாம் நுட்பமாக ஆராய்ந்து இந்நூல் ஆக்கப்படலாயிற்று. தமிழ் மொழியும், சிவநெறியும் இவ்வுலகம் முழுமையும் ஒருகால் ஓங்கியிருந்தன என்பதை விளக்கும்பொருட்டுப் பல ஓவியங்களும், மேற்கோள்களும் இடையிடையே காட்டப்பட்டுள்ளன.
பேராசிரியர் எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் சில ஆண்டுகட்குமுன் வெளியிட்ட தமிழ் இந்தியா (Tamil India) என்னும் ஆங்கில நூல் தமிழ்மக்களாற் பெரிதும் போற்றிப் பயிலப் பட்டுவருகின்றது. அவ்வகை உணர்ச்சியையும் உள்ளக் கிளர்ச்சியையும் தமிழ் மக்களிடத்துத் தோற்றுவித்தற் பொருட்டே இத்தமிழ் நூலுக்கும் 'தமிழ் இந்தியா' என்னும் பெயர் இடப்படலாயிற்று.
* "1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்."