தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   669


 

இனி,   நடத்துவிப்பி, வருவிப்பி, நடப்பிப்பி எனவும் வரும் என்று
கூறி,  இவற்றை  இருமடி  ஏவல் என்பாரும் உளர். இவற்றை இருகால்
ஏவுதல் கூறியது கூறலாம் ஆதலின், இவை இழிவழக்கு என மறுக்க.
 

இனி,   உண்ணும், தின்னும் எனப் பன்மைக்கண் வரும் உம் ஈறும்,
உண்ணல்  என  வரும் அல் ஈற்று மறையும், மறால் என வரும் ஆல்
ஈறும்,  ‘அகையேல்  அமர்தோழி,  அழேல்,’ (சீவக. 1524) என வரும்
காண்    ஈறுமாகிய   சொல்வகை   ஐந்தும்   முன்னிற்   சூத்திரத்து
எதிர்காலமொன்றினும்    வரும்   இகரம்   முற்கூறிய   முறையன்றிக்
கூற்றினாற் கொள்க.
 

முற்கூறிய  எழுத்துவகை இருபத்துமூன்றும் சொல்வகை ஐந்துமாகிய
இருபத்தெட்டும்   முன்னிலையேவல்  ஒருமைமுற்று  என்று  உணர்க.
நடவாய், வாராய், உண்ணாய், தின்னாய் என்னுஞ் சொற்கள், ஆய் ஈறு
கெட்டு,  நட,  வா,  உண்,  தின்  என  நிற்கும் என்று சேனாவரையர்
கூறினாராலெனின்,   அது   பொருந்தாமை  எச்சவியலுள்  ‘செய்யாய்
என்னும்  முன்னிலை  வினைச்சொல்  (450)  என்னுஞ்  சூத்திரத்துள்
கூறுதும். (27)
 

முன்னிலை ஒழிந்த ஏனை வினைகள்
 

227.

எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
ஐம்பாற்கு முரிய தோன்ற லாறே.
 

இது, முன்னிலை ஒழிந்தவற்றின் இலக்கணங் கூறுகின்றது.
 

(இ-ள்.)  எஞ்சிய கிளவி - முன்னிலை வினை ஒழித்து ஒழிந்த ஏழு
வினைச்சொல்லும்,  இடத்தொடு  சிவணி  ஐம்பாற்கும்  உரிய - மூன்று
இடத்தொடும் பொருந்தி ஐந்துபாற்கும் உரியவாம், தோன்றலாறே-அவை
தத்தம் பொருட்கண் தோன்றும் இடத்து, எ-று.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:49:48(இந்திய நேரம்)